திமுகவில் ஒவ்வொரு தொண்டனும் கொதித்துப் போயுள்ளான்.. நெப்போலியன் குமுறல்
சென்னை: திமுகவில் ஜனநாயகமே இல்லை. அங்கு ஒவ்வொரு தொண்டனும் கொதித்துப் போயுள்ளான். பூனைக்கு மணி கட்டும் வகையில் முதல் ஆளாய் நான் வந்திருக்கிறேன் என்று கூறியுள்ளார் நடிகரும், முன்னாள் மத்திய அமைச்சருமான நெப்போலியன்.
திமுகவில் கிட்டத்தட்ட 35 ஆண்டு காலம் இருந்தவர் நெப்போலியன். இந்த நிலையில் அவர் திடீரென திமுகவை விட்டு விலகி நேற்று பாஜகவில் இணைந்தார்.
சென்னை வந்த பாஜக தலைவர் அமீத் ஷாவை சென்னையில் உள்ள பாஜக தலைமையகத்தில் சந்தித்து பாஜகவில் தன்னை இணைத்துக் கொண்டார் நெப்போலியன்.
பின்னர் செய்தியாளர்களிடம் தான் திமுகவிலிருந்து விலகியது ஏன், பாஜகவில் சேர்ந்தது ஏன் என்பது குறித்து அவர் விளக்கினார்.

35 வருட பொது வாழ்க்கை
நான் 35 ஆண்டுகளாக பொது வாழ்வில் இருந்து வருகிறேன். என் மனசாட்சிப்படி தேர்தல் பணியும் ஆற்றியிருக்கிறேன்.

மோடி கரத்தைப் பலப்படுத்துவேன்
நரேந்திர மோடி இந்தியாவை உயர்ந்த இடத்திற்கு கொண்டு செல்வதற்கு பாடுபட்டு வருகிறார். உலக நாடுகளில் அவருக்கு பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. அவரது கரத்தை இந்தியர்கள் பலப்படுத்த வேண்டும். அந்த வகையில் நான் பாரதீய ஜனதாவில் இணைந்துள்ளேன்.

திமுகவின் செயல்பாடு பிடிக்கவில்லை
திமுகவின் செயல்பாடு எனக்கு பிடிக்கவில்லை. கட்சி தலைமையின் கீழ் இல்லை. உட்கட்சி தேர்தல் நேர்மையாக நடக்கவில்லை. இன்னும் சொல்லப்போனால் திமுகவில் உட்கட்சி ஜனநாயகம் இல்லை.

கொதித்துப் போயுள்ளனர் தொண்டர்கள்
ஒவ்வொரு தொண்டனும் கொதித்து போய் உள்ளான். எனவே பூனைக்கு மணி கட்டும் வகையில் முதல் ஆளாய் நான் வந்திருக்கிறேன்.

மு.க.அழகிரி ஆசியுடன்
மு.க.அழகிரியிடம் பாரதீய ஜனதாவில் இணையப்போகிறேன் என்று கூறினேன். இதற்கு அவர் என்னை வாழ்த்தி அனுப்பிவைத்தார். அவரின் ஆசி பெற்ற பிறகே பாரதீய ஜனதாவில் நான் இணைந்து இருக்கிறேன்.

அழகிரியும் வருவாரா...!
மு.க.அழகிரியும் பாஜகவுக்கு வருவாரா என்பது எனக்குத் தெரியாது. அதை அவர்தான் முடிவெடுக்க வேண்டும் என்றார் நெப்போலியன்.












Click it and Unblock the Notifications