கார் சைட் மிர்ரரை உடைத்து.. ஐடி அதிகாரியின் ஃபைல்களை தூக்கி எறிந்தும் திமுக தொண்டர்கள் அட்டகாசம்
கரூர்: அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சொந்தமான வீடுகளில் ஐடி ரெய்டு நடத்த வந்த அதிகாரிகளின் கார் கண்ணாடிகளை உடைத்து சைட் மிர்ரர்களை முறுக்கி அவர்களுடைய கோப்புகளை திமுக தொண்டர்கள் தூக்கி எறிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழக மின்சாரத் துறை அமைச்சராக இருப்பவர் செந்தில் பாலாஜி. இவர் கொங்கு மண்டலத்தை சேர்ந்தவர். இவர் கொங்கு மண்டலத்தை சேர்ந்தவர். இவர் கோவை மாவட்ட திமுக தேர்தல் பொறுப்பாளராகவும் இருந்து வருகிறார்.
உள்ளாட்சி தேர்தலில் திமுக பலவீனமாக இருந்த கொங்கு மண்டலத்தில் திமுக நிறைய இடங்களில் வென்றதற்கு செந்தில் பாலாஜிதான் காரணம் என சொல்லப்படுகிறது. அது போல் 2021 ஆம் ஆண்டு கொங்கு மண்டலத்தில் நிறைய இடங்களில் திமுக வெல்லவில்லை. அதனால் 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் கொங்கு மண்டலத்தை மொத்தமாக அள்ள இப்போதே பூத் கமிட்டிகளை வலுப்படுத்தும் முயற்சிகளில் செந்தில் பாலாஜி ஈடுபட்டு வருகிறார்.
இவரது பணிகளால் முதல்வர் ஸ்டாலினே மெச்சும் அளவுக்கு அவருடைய குட் வில் புக்கில் இருந்து வருகிறார். இந்த நிலையில் அதிமுகவில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி போக்குவரத்து துறையில் ஓட்டுநர், நடத்துநர் உள்ளிட்ட பணிகளை வாங்கித் தருவதாக பணமோசடி செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கள்ளச்சாராயம் குடித்து 23 பேர் பலி, கூடுதல் விலைக்கு மதுபானம் விற்பனை உள்ளிட்ட பிரச்சினைகளை அதிமுக, பாஜக எழுப்பி வந்தது. இந்த நிலையில் இன்று அதிகாலை முதல் செந்தில் பாலாஜிக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித் துறையினர் சோதனை நடத்தி வருகிறார்கள்.
கரூர் மாவட்டத்தில் மட்டும் 22 இடங்களில் குறி வைத்து இந்த சோதனை நடத்தப்படுகிறது. இதில் 9 இடங்களில் சோதனை நடத்தவிடாமல் திமுகவினர் ரகளையில் ஈடுபட்டனர். அமைச்சர் செந்தில் பாலாஜியின் தம்பி அசோக் வீட்டில் அதிகாரிகளை உள்ளே செல்லவிடாமல் தொண்டர்கள் தடுத்து வாக்குவாதம் செய்தனர். அவர்களுடன் சண்டையிட்டனர்.
இன்னும் சில இடங்களில் ஐடி அதிகாரிகளின் கார் கண்ணாடிகளை உடைத்தனர். அவர்களது காரின் சைடு மிரர்களை உடைத்தும் ரகளை செய்தனர். பின்னர் காரில் இருந்த லேப்டாப் சில ஃபைல்களை எடுக்க வந்த அதிகாரிகளை இழுத்து தள்ளி அந்த ஃபைல்களை பிடுங்கி தூக்கி எறிந்தனர். இதனால் அந்த இடத்தில் பரபரப்பு ஏற்பட்டது. ஐடி அதிகாரிகள் தங்கள் பாதுகாப்புக்காக சில திமுக தொண்டர்களை தாக்கியதாகவும் அவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகின.