திமுக வேட்பாளருக்கே வெற்றி: ஏன் விடுதலை திருமாவளவன் இப்படி சொல்லி இருக்கிறார்?
ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் திமுக வேட்பாளருக்கே தார்மீக வெற்றி என்று திருமாவளவன் குறிப்பிட்டு உள்ளார்.
சென்னை : தி.மு.க வேட்பாளர் மருதுகணேஷ் தார்மீக வெற்றி பெற்றுள்ளார் என்று விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் ஆர்.கே நகர் இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிவு குறித்து கருத்து தெரிவித்து உள்ளார்.
ஆர்.கே இடைத்தேர்தல் வாக்குப்பதிவு கடந்த 21ம் தேதி நடந்தது. பதிவான வாக்குகளை எண்ணும் பணி ராணி மேரி கல்லூரியில் இன்று நடைபெற்றது. ஆரம்பம் முதலே பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகித்து வந்த தினகரன், அதிமுக, திமுக கட்சிகளை பின் தள்ளி சுயேச்சையாக வெற்றி பெற்று உள்ளார்.

டி.டி.வி தினகரன் பிரம்மாண்ட வெற்றி பெற்றுள்ள நிலையில், ஆளும்கட்சியான அதிமுகவின் வேட்பாளர் மதுசூதனன், திமுக வேட்பாளர் மருதுகணேஷ் இரண்டாம், மூன்றாம் இடத்தை பிடித்து உள்ளனர். இதில் தினகரன், மதுசூதனன் தவிர்த்து திமுக உள்ளிட்ட அனைத்து கட்சி வேட்பாளர்களும் டெபாஸிட் இழந்துள்ளனர்.
இந்த தேர்தலில் திமுகவை மதிமுக, விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் ஆதரித்தன. மிகப்பெரிய கூட்டணி பலத்தோடு இடைத்தேர்தலில் திமுக களமிறங்கினாலும், திமுக வேட்பாளர் டெபாஸிட் இழந்து உள்ளார். இதனால், திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளோடு மக்கள் அதிருப்தியில் இருப்பதை உணர்த்துவதாக உள்ளது.
இந்நிலையில், தேர்தல் முடிவுகள் குறித்து விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் கருத்து தெரிவித்து உள்ளார். அதில், அதிமுக யாருக்கு என்கிற போட்டியில் தான் தினகரன் வெற்றி பெற்று உள்ளார் ஆனால், இந்த தேர்தலில் பணம் என்பது பிரதானமாக இருந்தது என்பதை யாரும் மறுக்க முடியாது. ஆளும்கட்சியு,ம், டிடிவி தினகரன் தரப்பும் மாறி மாறி பணம் கொடுத்து ஓட்டுகளை வாங்கி உள்ளனர்.
ஒரே ஒரு தொகுதியில் பணம் கொடுக்கப்பட்டதைக் கூட, தடுக்க முடியாமல் தேர்தல் ஆணையம் தோல்வி அடைந்து உள்ளது என்பதே இங்கு உண்மை. இதோடு ஒப்பிட்டால், எங்கள் கூட்டணி ஆதரித்த திமுக வேட்பாளர் மருது கணேஷ் தான் ஆர்.கே நகர் இடைத்தேர்தலின் தார்மீக வெற்றியாளர் என்பது தெளிவாகிறது என்று திருமாவளவன் குறிப்பிட்டு உள்ளார்.












Click it and Unblock the Notifications