தி.மு.க.வை வீழ்த்த நினைத்தால் வீழ்வர்.. அழிக்க நினைத்தால் அழிவர்..: கருணாநிதி ஆவேசம்!
சென்னை: தி.மு.க.வை வீழ்த்த நினைப்பவர்கள் வீழ்ந்து போவார்கள்.. அழிக்க நினைப்பவர்கள் அழிந்து போவார்கள் என்று அக்கட்சித் தலைவர் கருணாநிதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சென்னை மேற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் பொதுக் குழு தீர்மான விளக்கம் பொதுக்கூட்டம் மயிலாப்பூரில் நேற்று இரவு நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் ஜெ.அன்பழகன் தலைமை தாங்கினார்.
இந்த கூட்டத்தில் தி.மு.க. தலைவர் கருணாநிதி பேசியதாவது:
தி.மு.க. கடமை, கண்ணியம், கட்டுப்பாடு இவற்றை பின்பற்றி வரும் கட்சி. இன்றைக்கு போஸ்டர்கள் ஒட்டும் கட்சி அல்ல. விளம்பரம் கொடுத்து கட்சியை நடத்துகிறோம் என்று மக்களுக்கு சொல்லும் இயக்கமும் அல்ல. திராவிட இன உணர்வு பெற்ற இயக்கம். சீற்றம் கொள்கிறவர்களுக்கு பாடம் புகட்டும் இயக்கம்.

தி.மு.க.வை நீடிக்க விடக்கூடாது என்ற ஒரு கூட்டம் தமிழகத்தில் இருக்கிறது. தி.மு.க. வெற்றி, தோல்வி, வீழ்ச்சி பற்றி கவலைப்படாத இயக்கமாக, தியாகத்தின் வடிவமாக மாறியுள்ளது என்பதை வலியுறுத்தும் கூட்டம்தான் இந்த கூட்டம். இந்த கூட்டத்தை பயன்படுத்தி தி.மு.க.விற்கு மேலும் எழுச்சி ஏற்படுத்தவேண்டும்.
இதை என்னுடைய கழகம் என்று நான் எப்போதும் சொல்லுவதில்லை. இது நம்முடைய கழகம், இதை வளர்க்கவேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. கட்சியை வளர்ப்பது குடும்பத்தை வளர்ப்பதுபோல, நம்முடைய இனத்தை வளர்ப்பதுபோல. எதிரிகளை வீழ்த்தி பாடம் கற்பிக்கும் வகையில் நாம் நம்முடைய இயக்கத்தை வளர்த்திருக்கிறோம்.
தோல்விகளை உதறிவிட்டு வெற்றிப்பாதையில் நடந்துகொண்டிருக்கிறோம். வெற்றி வாய்ப்பை நாம் இழந்தாலும் தமிழர்களுக்கு உணர்வை ஊட்டக்கூடிய சாதனமாக தி.மு.க.வை வளர்க்கிறோம்.
தி.மு.க.வை வீழ்த்த நினைப்பவர்கள் வீழ்ந்து போவார்கள். அழிக்க நினைப்பவர்கள் அழிந்து போவார்கள். இங்கே கூடியிருக்கும் கூட்டமே நம்மை யாராலும் புறக்கணிக்க முடியாது என்பதற்கு சான்று. ஆனால் இன்றைக்கு நம்முடைய கட்சிக்குள் மோதல் ஏற்படுவதாக சிலர் பொய்களை உரைத்து வருகிறார்கள். அவர்களுக்கு நான் சொல்லிக்கொள்கிறேன், எங்களுக்குள் மோதல் வராது. இதை மயிலாப்பூர் கருணாநிதியாக அல்ல, திருவாரூர் கருணாநிதியாக சொல்லிக்கொள்கிறேன்.
இன்றைக்கு மக்களிடத்தில் பொய் சொல்லி தி.மு.க.வை அழிக்கமுடியும் என்றால், எங்களாலும் பொய் சொல்ல முடியும். நாங்களும் மகாசமத்தாக பொய் சொல்லுவோம். இந்த இயக்கத்தை வளர்க்க நாங்கள் அரும்பாடுபட்டிருக்கிறோம். உற்றார், உறவினர்களை இழந்திருக்கிறோம். எந்த கட்சி நினைத்தாலும், அவர்கள் கனவு பலிக்காது. நாங்கள் விஷங்களை ஒழிக்கக்கூடிய இயக்கத்தை சேர்ந்தவர்கள். ஆகவே நாம் அனைவரும் தி.மு.க.வை காக்க உழைக்கவேண்டும்.
இவ்வாறு கருணாநிதி உரையாற்றினார்.












Click it and Unblock the Notifications