சோழவந்தான் தொகுதி திமுக வேட்பாளர் மாற்றம்... ‘அரக்கோணம்’ பவானி புதிய வேட்பாளரானார்!
சென்னை: மதுரை மாவட்டம் சோழவந்தான் தனித் தொகுதி திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட ஸ்ரீபிரியா தேன்மொழி மாற்றப்பட்டு, புதிய வேட்பாளராக பவானி அறிவிக்கப்பட்டுள்ளார்.
தமிழக சட்டசபைத் தேர்தல் அடுத்தமாதம் 16ம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி, திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை கடந்த வாரம் அக்கட்சியின் தலைவர் கருணாநிதி அறிவித்தார்.
அதன்படி, மதுரை மாவட்டத்தைச் சார்ந்த சோழவந்தான் தனி தொகுதி வேட்பாளராக ஸ்ரீபிரியா தேன்மொழி அறிவிக்கப்பட்டார். ஆனால், அவர் அத்தொகுதியில் போட்டியிட விரும்பவில்லை எனக் கூறப்படுகிறது.
இதனால், அத்தொகுதியின் புதிய வேட்பாளராக பவானி அறிவிக்கப்பட்டுள்ளார். முன்னதாக, பவானி அரக்கோணம் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்தார்.
அப்போது அவரை மாற்றக் கோரி திமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அரக்கோணம் (தனி) தொகுதி வேட்பாளர் பவானி நீக்கப்பட்டு, புதிய வேட்பாளராக என்.ராஜ்குமார் அறிவிக்கப்பட்டார்.
இந்நிலையில், ஸ்ரீபிரியா தேன்மொழி சோழவந்தான் தனி தொகுதியில் போட்டியிட முன்வராததால் பவானி புதிய வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.