மருத்துவமனையில் சிகிச்சை பெறும் சோ ராமசாமியை நேரில் சந்தித்து நலம் விசாரித்த கருணாநிதி
சென்னை: உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் மூத்த பத்திரிகையாளர் 'சோ' ராமசாமியை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார் திமுக தலைவர் கருணாநிதி.
மூச்சு திணறல் உள்ளிட்ட சில பிரச்சினைகளால், ஆயிரம் விளக்கு பகுதியிலுள்ள அப்போலோ மருத்துவமனையில் சோ ராமசாமி சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். அவருக்கு ஐசியூவில் வைத்து சிகிச்சையளிக்கப்படுகிறது. அதே மருத்துவமனையில்தான், திமுக தலைவர் கருணாநிதியின் மகள் கனிமொழிக்கும், தைராய்ட் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

அறுவை சிகிச்சைக்கு பின் மருத்துவமனையில் ஓய்வு பெற்று வரும், கனிமொழியை நேற்றிரவு கருணாநிதி சந்தித்து நலம் விசாரித்தார். பின்னர் ஐசியூவில் சிகிச்சை பெற்று வரும் 'சோ' வையும் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.
சுமார் 10 நிமிடங்கள் இந்த சந்திப்பு நடைபெற்றது. உடன் ராசாத்தி அம்மாள், துரைமுருகன், ஆ.ராசா, எ.வ.வேலு போன்றோரும் இருந்தனர். கருணாநிதியும், சோவும் நீண்ட கால நண்பர்களாக இருந்தவர்கள். ஆனால், நட்பு பிளவுபட்ட நிலையில், கடந்த பல ஆண்டுகளாக கருணாநிதியை நையாண்டி செய்து தனது துக்ளக் இதழில் எழுதி வருபவர் சோ. சமீபகாலமாகவே, ஜெயலலிதா ஆதரவு நிலைப்பாடுடையவராக அறியப்படும் சோவை கருணாநிதி சந்தித்து நலம் விசாரித்திருப்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications