சகோதரி அஞ்சலி நிகழ்ச்சியில் கண்ணீருடன் அழகிரியை சந்தித்த கருணாநிதி.. கண்கள் பனிக்குமா?
சென்னை: முன்னாள் அமைச்சர் மாறனின் தாயார் சண்முகசுந்தரம்மாள் மறைவுக்கு, அஞ்சலி செலுத்த சென்ற இடத்தில், தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கும், முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரிக்கும் இடையே, சந்திப்பு நடந்துள்ளதாக வெளியாகி உள்ளது.
மதுரை சுற்றுவட்டார மாவட்டங்களில் திமுகவின் முக்கிய புள்ளியாக விளங்கிய அழகிரி மீது,
தி.மு.க. தலைமை, கடந்த ஆண்டு ஜனவரி, 14ம் தேதி, நடவடிக்கை எடுத்து, கட்சியை விட்டு தற்காலிகமாக நீக்கியது.

நிரந்தர நீக்கம்
அழகிரியின் விமர்சனம் அதிகமானதை அடுத்து, இரு மாதங்களில் அதாவது மார்ச், 25ல், அவர், கட்சியை விட்டு நிரந்தரமாக நீக்கப்பட்டார். தன்பின், கருணாநிதியை சந்திக்க அழகிரி, பிடிவாதமாக மறுத்துவந்தார். கடந்த மார்ச், 3ம் தேதி, சென்னையில், அழகிரியின் தம்பி தமிழரசு மகன் அருள்நிதியின் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. அந்த விழாவுக்கு, அழகிரி, குடும்பத்துடன் வந்திருந்தார்.

அன்பழகன் விருப்பம்
அந்த நிகழ்ச்சியில், ஒரே பகுதியில் இருவரும் இருந்த போதிலும், கருணாநிதியும், அழகிரியும் ஒருவரை ஒருவர் சந்திக்கவில்லை. அப்போது நடந்த சமரச முயற்சியும், தோல்வியில் முடிந்தது. இதற்கிடையில், கடந்த ஏப்ரல், 13ம் தேதி, உடல்நலம் பாதிக்கப்பட்டு, வீட்டில் ஓய்வில் இருந்த கட்சியின் பொதுச் செயலர் அன்பழகனை சந்தித்தார் அழகிரி. அன்பழகன் தலையீட்டால் அழகிரியை கட்சியில் சேர்ப்பதற்கான பேச்சில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது

கையை பிடித்து பேசிய கருணாநிதி
இந்நிலையில்தான், கருணாநிதியின் அக்கா சண்முக சுந்தரம்மாள் காலமானார். அதையடுத்து, தனது அத்தைக்கு அஞ்சலி செலுத்த அழகிரி சென்றார். அங்கே மிகுந்த சோகத்துடன் இருந்த கருணாநிதியிடம் சென்று, அழகிரி பேசியுள்ளார். அப்போது அவர், அழகிரியின் கையை பிடித்தபடி, பேசியதாக கூறப்படுகிறது. குறிப்பாக, சண்முக சுந்தரம்மாளுக்கும், சிறு வயதில் அழகிரிக்கும் இடையேயான பாசத்தை குறிப்பிட்டு காட்டி உருக்கமாக பேசியுள்ளாராம் கருணாநிதி.

கண்டுகொள்ளாத ஸ்டாலின்
கண்ணீருடன் நடந்த இந்த சந்திப்பின் போது, ஸ்டாலினும் பக்கத்தில்தான் இருந்துள்ளார். ஆனால், அழகிரி மற்றும் ஸ்டாலின் இருவரும், ஒருவரை மற்றொருவர் கண்டுகொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. தேர்தல் நெருங்கும் நேரத்தில், தென் மாவட்டங்களில் கட்சியை ஒற்றுமைப்படுத்த வசதியாக அழகிரியை மீண்டும் கட்சியில் சேர்த்துக்கொள்ள கருணாநிதி விரும்புவதாக கூறப்படுகிறது. எனவே விரைவிலேயே கருணாநிதியின், கண்கள் பனிக்க வாய்ப்புள்ளது.












Click it and Unblock the Notifications