பஸ் கட்டண உயர்வை ரத்து செய்ய கோரி தமிழகம் முழுவதும் திமுக தலைமையில் அனைத்துக் கட்சியினர் சாலை மறியல்
பேருந்து கட்டண உயர்வை முழுமையாக ரத்து செய்ய வலியுறுத்தி தமிழகம் முழுவதும் இன்ற திமுக சார்பில் மறியல் போராட்டம் நடக்கிறது.
சென்னை: உயர்த்தப்பட்ட பேருந்து கட்டணத்தை முழுமையாக ரத்து செய்ய வலியுறுத்தி தமிழகம் முழுவதும் இன்று மறியல் போராட்டத்திற்கு திமுக அழைப்பு விடுத்துள்ளது. இந்த மறியலில் திமுகவுடன் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அனைத்தும் பங்கேற்பதாக தெரிவித்துள்ளன.
தமிழக அரசு அதிரடியாக உள்ளூர் மற்றும் வெளியூர் பேருந்துகளின் கட்டணத்தை அதிகரித்தது. இந்த கட்டண உயர்வை கண்டித்து தமிழகம் முழுவதும் மாணவர்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர். தமிழக எதிர்க்கட்சிகளும் பேருந்து கட்டண உயர்வை கண்டித்து தனித்தனியே போராட்டங்களை அறிவித்தன.

இந்நிலையில் தமிழக அரசு நேற்று பேருந்து கட்டணத்தை குறைப்பதாக அறிவிப்பை வெளியிட்டது. ஆனால் இது குறைந்த அளவிலேயே இருப்பதால் இதனால் மக்களுக்கு எந்தப் பயனும் இல்லை, வெறும் கண்துடைப்பு நடவடிக்கையாகவே பேருந்து கட்டணத்தை அரசு குறைத்துள்ளதாகவும் எதிர்க்கட்சிகள் கூறியுள்ளனர்.
இதனிடையே கட்டணத்தை முழுமையாக ரத்து செய்ய வலியுறுத்தி இன்று தமிழகம் முழுவதும் மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சி ஒன்றியங்கள் அளவில் மறியல் போராட்டங்கள் நடைபெறும் என்று திமுக அறிவித்திருந்தது. திட்டமிட்டபடி இன்று மறியல் போராட்டம் நடைபெறும் என்று திமுக அறிவித்துள்ளது. மேலும் இந்த மறியல் போராட்டத்தில் திமுகவுடன், காங்கிரஸ், மதிமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சி, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகளும் பங்கேற்பதாக அறிவித்துள்ளன.
இதனையடுத்து திருச்சியில் திமுக சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள மறியல் போராட்டத்தில் அனைத்துக்கட்சியினருடன், மாணவர்கள், பொதுமக்களும் பங்கேற்றுள்ளன.












Click it and Unblock the Notifications