திமுகவும், கமலும் சேர்ந்தா மாஸுதான்.. தமிழகத்தின் சரி பாதி ஆதரவு கிடைப்பது லேசுதான்!
Recommended Video
சென்னை: தந்தி டிவி நடத்தியுள்ள கருத்துக் கணிப்பு ஒரு விஷயத்தை தெளிவாக்கியுள்ளது. வரும் லோக்சபா தேர்தலில் மத்தியிலும், மாநிலத்திலும் ஆளும் கட்சிகளால் தமிழகத்தில் சோபிக்க முடியாது என்பதுதான் அது.
தந்தி டிவி மக்கள் யார் பக்கம் என்ற கருத்துக் கணிப்பை நடத்தியது. இதன் முடிவுகளை கடந்த சில நாட்களாக அது வெளியிட்டு வருகிறது. நேற்று சில முக்கிய கேள்விகளையும் அதற்கான பதில்களையும் அது வெளியிட்டது.
அந்த கருத்து கணிப்பில் சுவாரசிய பல தகவல்கள் வெளியாகியுள்ளன.
கருத்து கணிப்பு
இன்று மக்களவை தேர்தல் நடந்தால் உங்கள் வாக்கு யாருக்கு..? என்ற கேள்விக்கு, பாஜக - 3%, நாம் தமிழர் - 3%, பாமக - 4%, ரஜினி ம.ம. - 5%, கமல் மய்யம் - 5%, அமமுக - 8%, அதிமுக - 25%, திமுக-காங். கூட்டணி - 41%, மற்றவை - 6% என மக்கள் தங்கள் ஆதரவை அளித்துள்ளனர். மத்தியில் ஆளும் பாஜக மற்றும் மாநிலத்தில் ஆளும் அதிமுக ஆகியவற்றை இணைத்து பார்த்தாலும் மொத்தம் 28 சதவீத வாக்குகள்தான் கிடைக்கும் என தெரிகிறது. அதிமுகவில் தற்போது நிலவும் சில சலசலப்புகளை வைத்து பார்த்தால் இது இன்னும் குறையவும் வாய்ப்புகள் உள்ளன.
எதிர்க்கட்சிகளுக்கே மவுசு
ஆனால், மத்தியிலும் மாநிலத்திலும் எதிர்க்கட்சியாக உள்ள, திமுக-காங்கிரஸ் கூட்டணி 41 சதவீத ஆதரவை பெற்றுள்ளது. திராவிட அரசியல் பேசி வரும் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யமும் திமுக கூட்டணியில் போட்டியிட்டால் இக்கூட்டணி சுமார் 50 சதவீத வாக்குகளை பெறும். அதாவது வாக்களிப்பவர்களில் 2ல் ஒருவர் திமுக-காங்கிரஸ் கூட்டணிக்கு வாக்களிப்பார்கள். எஞ்சிய ஒருவரின் வாக்கு மற்ற பல கட்சிகளுக்கும் சிதறிப்போகும்.
கமல், ரஜினியைவிட அதிகம்
தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் 8 சதவீத வாக்குகளை பெற்றுள்ளது என்று இந்த கருத்துக் கணிப்பு தெரிவிப்பது அக்கட்சியினருக்கே ஆச்சரியமான விஷயம்தான். ஏனெனில், தினகரனைவிட புகழ் உச்சத்தில் இருக்கும் கமல்ஹாசன், ரஜினிகாந்த் போன்றோருக்கே தலா 5 சதவீத ஆதரவுதான் உள்ளது. அரசியலில் அனுபவம் கொண்ட பாமகவும் தினகரனைவிட குறைந்த வாக்குகளை பெற்றுள்ளது.
தினகரன் ஆதரவு
இந்த கருத்து கணிப்பை வைத்து பார்த்தால், தினகரன் தீவிர அரசியலில் இறங்கினால் விஜயகாந்த்தை போல கணிசமான வாக்கு வங்கியை இவராலும் உருவாக்க முடியும் என்ற தோற்றம் ஏற்பட்டுள்ளது. இது அவர் ஆதரவாளர்களை குஷிப்படுத்தியுள்ளது.