திமுக - காங்கிரஸ் தொகுதி பங்கீடு ஓரிரு நாளில் இறுதி செய்யப்படும்: ஈ.வி.கே.எஸ். தகவல்
சென்னை: திமுக-வுடனான தொகுதி பங்கீடு குறித்து செவ்வாய் அல்லது புதன்கிழமைகளில் இறுதி செய்யப்பட்டுவிடும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கூறினார்.
தமிழக சட்டப் பேரவைத் தொடர்பாக காங்கிரஸ் தலைமையகமான சத்தியமூர்த்தி பவனில் அக்கட்சியின் மாநிலத் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தலைமையில் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் தேசிய செயலாளர் திருநாவுக்கரசு, தமிழக முன்னாள் காங்கிரஸ் தலைவர்கள் எம்.கிருஷ்ணசாமி, கே.வீ.தங்கபாலு, முன்னாள் எம்எல்ஏ யசோதா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கூறுகையில், நடைபெற உள்ள 2016 சட்டப் பேரவைத் தேர்தலில் திமுக-வுடன் கூட்டணி வைத்துள்ள காங்கிரஸ் கட்சி எத்தனைத் தொகுதிகளில் போட்டியிடப் போகிறது என்பது ஓரிரு நாளில் இறுதி செய்யப்பட்டுவிடும். உடனடியாக, எந்தெந்த தொகுதிகள் என்பதும் முடிவாகிவிடும்.
அதிமுக-வுக்கு எதிராக பாஜக பிரசாரம் செய்வது சந்தர்ப்பவாதமே. ஏனெனில் அதிமுக-வுடன் எப்படியாவது கூட்டணி வைத்துக் கொள்ளவேண்டும் எனக் கடும் முயற்சிகளை பாஜக மேற்கொண்டது. பிரதமர் நரேந்திர மோடி, அருண் ஜேட்லி என மத்தியிலிருந்து பலர் ஜெயலலிதாவைச் சந்தித்து பேசினர்.
இந்த முயற்சிகள் பலனளிக்கவில்லை என்றதும், அதிமுக-வை இப்போது அவர்கள் விமர்சிக்கின்றனர். இது தமிழக அரசின் பொறுப்பற்ற தன்மையையேக் காட்டுகிறது. இதற்காக வருகின்ற தேர்தலில் மக்கள் அதிமுக-வுக்கு சரியான பாடம் புகட்டுவர் என்று அவர் தெரிவித்துள்ளார்.
புதிய மின் திட்டங்களை கொண்டு வருவதற்காக மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் பலமுறை தொடர்பு கொண்டும், அவரை ஜெயலலிதா சந்திக்க மறுத்ததற்கு அவர் கண்டனம் தெரிவித்தார். மேலும், சட்டப்பேரவை தேர்தல் பிரசாரம் செய்ய காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் தமிழகம் வருகை தருவார் என்றும், திமுக, காங்கிரஸ் கூட்டணியை விமர்சிக்க பாஜகவுக்கு தகுதியும் இல்லை என்றும் ஈவிகேஎஸ் இளங்கோவன் கூறினார்.












Click it and Unblock the Notifications