ஆளுநர் கடிதத்தை சட்டசபையில் படித்துக்காட்ட மறுத்த சபாநாயகர்... திமுக - காங்., வெளிநடப்பு
ஆளுநரிடம் இருந்து வந்த கடிதத்தை சட்டசபையில் சபாநாயகர் படித்து காட்ட மறுத்ததை கண்டித்து திமுகவினர் வெளிநடப்பு செய்துள்ளனர்.
சென்னை: தமிழக சட்டசபையில் எம்எல்ஏக்கள் பண பேர விவகாரம் இன்றும் புயலை கிளப்பியது. எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ஆளுநர் வித்யாசாகர் அனுப்பிய கடிதத்தை விதிப்படி சபாநாயகர் சட்டசபையில் படித்து காட்ட வேண்டும் என்று எதிர்கட்சித்தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தினார். இதற்கு சபாநாயகர் மறுக்கவே, அதனை கண்டித்து திமுகவினர் வெளிநடப்பு செய்தனர்.
கூவத்தூரில் அதிமுக எம்எல்ஏக்களுக்கு கோடிக்கணக்கான பணம் கொடுக்கப்பட்டதாக சரவணன் எம்எல்ஏ பேசியதாக ஒரு வீடியோ ஒளிபரப்பானது. இது கடந்த 14ஆம் தேதியன்று கூடிய சட்டசபை கூட்டத் தொடரில் எதிரொலித்தது.
இது குறித்த விவாதம் நடத்த வேண்டும் என்று எதிர்கட்சித்தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தவே திமுகவினர் கூண்டோடு வெளியேற்றப்பட்டனர்.
தினசரியும் சட்டசபையில் இந்த விவகாரம் எதிரொலிக்கிறது. சபாநாயகர் ஆதாரம் கேட்கவே, அதை சிடி வடிவில் சபாநாயகர் அறையில் சென்று ஸ்டாலின் அளித்தார்.
இதனையடுத்து சென்னை வந்த ஆளுநர் வித்யாசாகர் ராவிடம் புகார் மனுவாக சிடியுடன் அளித்தார் ஸ்டாலின். இந்த நிலையில் ஆளுநர் வித்யாசாகர் ராவ், எம்எல்ஏக்கள் பண பேர விவகாரம் தொடர்பாக சட்டசபை சபாநாயகர், செயலருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
இன்று சட்டசபை கூடிய உடன் கேள்வி நேரம் நடைபெற்றது. கேள்வி நேரம் முடிந்த உடன் நேரமில்லா நேரத்தில் ஆளுநர் கடிதத்தை படித்துக்காட்ட வேண்டும் என்று ஸ்டாலின் வலியுறுத்தினார். அதற்கு சபாநாயகர் மறுக்கவே, இதற்கு கண்டனம் தெரிவித்து திமுக உறுப்பினர்கள் எதிர்கட்சித்தலைவர் ஸ்டாலின் தலைமையில் வெளி நடப்பு செய்தனர். கூடவே கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சி உறுப்பினர்களும் வெளிநடப்பு செய்தனர்.