"சி. மு.., சி.பி." - தேமுதிகவை வளைக்க திமுக வீசிய கடைசி வலை..
சென்னை: லோக்சபா தேர்தலில் தேமுதிகவை வளைக்க ஆகக்கூடுமானவரை முயற்சிகளை எடுத்துவிடுவது என்பதில் திமுக மிகவும் உறுதியாகவே இருக்கிறது.
லோக்சபா தேர்தல் நெருங்கிவிட்ட நிலையிலும் பல மாதங்களாக பாஜக, திமுக, காங்கிரஸ் கட்சிகளுக்கு போக்கு காட்டி வருகிறது தேமுதிக. இந்த கட்சிகளின் தலைவர்கள் உச்சகட்ட விரக்திக்கே போய்விட்ட நிலையிலும் கூட வேறுவழியே இல்லாமல் கிடைக்கிற வலைகளையெல்லாம் வீசிக் கொண்டே இருக்கிறார்கள்.
இந்த கூட்டணி விவகாரத்தில் பாஜக, திமுக தரப்பில் தேமுதிகவை பற்றி பேசும் போது "சி.மு, சி.பி." என்று சொல்லிக் கொள்ளும் அளவுக்கு அதாவது விஜயகாந்த் சிங்கப்பூர் போகும் முன்பு, சிங்கப்பூர் போன பின்பு என்று சொல்லும் வகையில் ஜரூரான பேச்சுகள் நடந்துள்ளன.

சிங்கப்பூருக்கு முன்பு
விஜயகாந்த் சிங்கப்பூர் செல்வதற்கு முன்பு திமுகவின் தூதராக அவரை சந்தித்தது பார்வார்டு பிளாக் தலைவர் சந்தானம்தான். சந்தானம் எம்.எல்.ஏ.வாக இருந்த போது அவருடன் மிக நெருக்கம் காட்டி வந்தவர் விஜயகாந்த். சீனியரான சந்தானத்தின் மீது விஜயகாந்த்-க்கு மரியாதை உண்டு என்பதால் அவரை தூது அனுப்பியிருக்கிறது திமுக

என்ன சொன்னார் விஜயகாந்த்?
சந்தானம், விஜயகாந்துடன் பேசும்போது மதவாத கட்சியை தோற்கடிக்க வேண்டும். இஸ்லாமிய சமூகம் உங்கள் மீது மரியாதை வைத்திருக்கிறது. நீங்கள் இருக்க வேண்டிய இடம் திமுகதான் என்று கூறியுள்ளார்.

திமுகவும் எதிரிதாங்க..
அதற்கு பதிலளித்த விஜயகாந்த், எனக்கு அதிமுகவும் எதிரிதான்.. திமுகவும் எதிரிதான். ஆனால் அதிமுக எங்களை அழிக்கனும்னு நினைக்குது இல்லையா.. அதனால நல்ல முடிவு எடுக்கிறேன் என்று நம்பிக்கையோடு சொன்னதுடன் சிங்கப்பூர் போய்விட்டு வந்து தகவல் சொல்கிறேன் என்றாராம்.

சந்தானம் முன்னால் கத்திய விஜயகாந்த்
இந்த பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கும் போது தேமுதிக எம்.எல்.ஏக்கள் பார்த்தசாரதியும் சந்திரகுமாரும் விஜயகாந்த் அறைக்குள் நுழைந்துவிட்டனராம். அவ்வளவுதான்.. யோவ் வெளிய போய்யா..யாருய்யா உள்ளே வரச்சொன்னது. என்று சந்தானம் முன்னாலே விஜயகாந்த் எகிறவும் செய்திருக்கிறார்.. இதனால் கொஞ்ச நேரம் அப்படியே அமைதியாக இருந்தபடியே சந்தானம் விடைபெற்றுவிட்டாராம்.

ஸ்டாலினிடம் நம்பிக்கை
பின்னர் நேராக மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து நடந்த விவரத்தை சொல்லியிருக்கிறார் சந்தானம். கருணாநிதிக்கும் தகவல் தெரிவிக்கப்பட நம்பிக்கையோடு இருந்தனர்.

பாஜக சார்பில் சதக் அப்துல்லா தூது
பாரதிய ஜனதா கட்சி சார்பில் விஜயகாந்தை சந்திக்க அகில இந்திய முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் சதக் அப்துல்லா தூது போனார். அப்போது, பாஜக அணிக்கு வந்துவிடுங்கள்.. 2016ல் நீங்கள்தான் முதல்வர் என்றெல்லாம் பில்டப் கொடுக்கப்பட்டுள்ளது. விஜயகாந்தும் பாஜக அணிக்கு சாதகமாக பதில் கூறியுள்ளார்.

சிங்கப்பூப்ருக்கு பின்பு..
விஜயகாந்த் சிங்கப்பூர் போன பின்பும் திமுக தரப்பில் பேசப்பட்டிருக்கிறது. விஜயகாந்த்துடன் திமுக தரப்பில் தொடர்பில் இருப்பது மருமகன் சபரீசன்தான். அப்போது சென்னை திரும்பியதும் பேசுகிறேன் என்று கூறியுள்ளார்.

பாஜகவுக்கு பதில் இல்லையாம்.
அதே நேரத்தில் சிங்கப்பூர்க்குப் போன விஜயகாந்தை பாஜக தரப்பு தொடர்பு கொள்ள முயற்சித்திருக்கிறது. ஆனால் விஜயகாந்த் தரப்பு பேசவில்லையாம்.

மார்ச் 3க்குப் பிறகு?
இந்த நிலையில் மார்ச் 3-ந் தேதி விஜயகாந்த் சென்னை திரும்புகிறார். அதன் பின்னராவது கூட்டணி குழப்பத்துக்கு முடிவு வரலாம் எனத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications