அரசியல் ஆதாயத்துக்காக திமுக அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டவில்லை - ஸ்டாலின் #Stalin
திமுக நடத்திய அனைத்துக்கட்சி கூட்டத்தில் நடிகர் விஜயகாந்த் பங்கேற்காதது ஏன் என்று திமுக பொருளாளர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை: எந்தவித அரசியல் காரணங்களுக்காகவும், அரசியல் ஆதாயத்துக்காகவும் அனைத்துக்கட்சி கூட்டம் கூட்டப்படவில்லை என்று திமுக பொருளாளரும், சட்டசபை எதிர்கட்சித்தலைவருமான மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். இந்த கூட்டத்தில் பங்கேற்காதது குறித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் விளக்க வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் கேட்டுள்ளார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு மறுப்பு தெரிவித்ததை அடுத்து தமிழக அரசு அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் என திமுக தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தது. ஆனால் தமிழக அரசு சார்பில் அனைத்து கட்சி கூட்டம் கூட்டப்படாததால் திமுக சார்பில் செவ்வாய்கிழமை அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் 11 கட்சியைச் சேர்ந்த தலைவர்கள் பங்கேற்றனர்.
அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், கூட்டத்தின் தீர்மானங்களை தமிழக அரசு நிறைவேற்றவில்லை என்றால், அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆராய இதே போன்று மீண்டும் கூட்டம் கூட்டப்படும். அந்தக் கூட்டத்தில் எந்த விதமான போராட்டத்தை நடத்துவது என தீர்மானிக்கப்படும் என்றார். அப்போது அவரிடம் செய்தியாளர்கள் சில கேள்விகளை எழுப்பினர்.
விஜயகாந்த் வராதது ஏன்?
விடுதலைச் சிறுத்தைகள், மதிமுக, சிபிஐ, சிபிஎம் ஆகிய கட்சிகள் கூட்டத்தைப் புறக்கணித்துள்ளதே? என்று கேட்டதற்கு பதிலளித்த ஸ்டாலின், நீங்கள் குறிப்பிட்ட கட்சிகள் என்று இல்லாமல் தேமுதிக, அதிமுக ஆகிய கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்தோம். விஜயகாந்த் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது இதே பிரச்னைக்காக அனைத்துக் கட்சித் தலைவர்களை டெல்லிக்கு அழைத்துச் சென்றார். அப்போது கருணாநிதியை நேரடியாக கோபாலபுரத்துக்கே வந்து சந்தித்து எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் அழைப்பு விடுத்தார். திமுக உங்கள் முயற்சிக்கு நிச்சயம் ஆதரவளிக்கும் என்று கூறி, ராஜ்யசபா உறுப்பினர் திருச்சி சிவாவை கருணாநிதி அனுப்பி வைத்தார். இப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருக்கக்கூடிய நான் கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு அவர் வரவில்லை. அனைவருக்கும் அழைப்பு கொடுத்திருக்கிறோம். அவர் ஏன் வரவில்லை என்பதை விளக்க வேண்டும் என்று கூறினார்.
அரசியல் ஆதாயமில்லை
அரசியல் ஆதாயத்துக்காக திமுக கூட்டத்தைக் கூட்டியுள்ளதாகக் கூறப்படுகிறதே? என்ற கேள்விக்கு பதிலளித்த ஸ்டாலின், எந்தவித அரசியல் காரணங்களுக்காகவும், அரசியல் ஆதாயத்துக்காகவும் இந்தக் கூட்டம் கூட்டப்படவில்லை. அப்படி ஒருவேளை கூட்டியிருந்தால் 50 சதவீதத்துக்கும் மேற்பட்ட தமிழக கட்சியினர் நிச்சயம் இந்தக் கூட்டத்துக்கு வந்திருக்க மாட்டார்கள் என்று கூறினார்.
வைகோவிற்கு தெரியும்
திமுக ஆட்சியில் இருந்தபோது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என வைகோவும், பாஜகவினரும் குற்றம் சாட்டியுள்ளனரே என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் சொன்ன ஸ்டாலின், கூட்டத்தில் பங்கேற்காமல் இருப்பதற்காகக் கூறப்படும் காரணங்கள் அவை. திமுக சார்பில் 18 ஆண்டுகள் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவர் வைகோ. அவருக்கு என்ன நடந்தது என்பது தெரியும் என்றார்.
பாஜகவிற்கு தெரியும்
மேலும் அவர், பாஜக தமிழகத் தலைவர்களும் இதையே சொல்கின்றனர். வி.பி.சிங் பிரதமராக இருந்தபோது கருணாநிதி மேற்கொண்ட முயற்சியின் காரணமாகத்தான் காவிரி நடுவர் மன்றம் அமைக்கப்பட்டது. பொன்.ராதாகிருஷ்ணனும், தமிழிசை செளந்தரராஜனும் வாஜ்பாயிடம் காவிரி விவகாரம் தொடர்பான உண்மை நிலையைக் கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டும் என்று கூறினார். ஸ்டாலினைத் தொடர்ந்து அனைத்துக்கட்சி கூட்டத்தில் பங்கேற்ற அனைத்து தலைவர்களும் செய்தியாளர்களை சந்தித்து பேசினர்.