வாக்கு சீட்டு முறையை திரும்ப கொண்டு வாருங்கள்.. தேர்தல் ஆணையத்தில் திமுக வலியுறுத்தல்
டெல்லி: லோக்சபா தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற பல்வேறு விஷயங்களில் சீர்திருத்தங்கள் கொண்டு வர தலைமை தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. அரசியல் கட்சிகளின் ஒத்துழைப்பு இருந்தால்தான் இந்த சீர்திருத்தங்களை அமல்படுத்த முடியும். எனவே, அரசியல் கட்சிகளிடம் இதில் ஒருமித்த கருத்தை உருவாக்க தலைமை தேர்தல் கமிஷன் முடிவு செய்துள்ளது.
இதற்காக தேசிய மற்றும் மாநில கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்துக்கு தேர்தல் கமிஷன் இன்று ஏற்பாடு செய்திருந்தது. இந்த கூட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட 7 தேசிய கட்சிகளும், 51 மாநில கட்சிகளும் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டது.

அதன்படி, இன்று டெல்லியில் இந்த கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழகத்தில் இருந்து திமுக சார்பில் டிகேஎஸ் இளங்கோவன், அதிமுக சார்பில் தம்பிதுரை பங்கேற்கின்றனர்.
தேர்தல் ஆணைய கூட்டத்தில் பங்கேற்ற பிறகு திமுகவின் டி.கே.எஸ்.இளங்கோவன் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு நடப்பதாக குற்றம்சாட்டினோம். வாக்குப்பதிவு இயந்திரத்தை பயன்படுத்தி உங்களை வெற்றிபெற வைக்கிறோம், எங்களுக்கு இவ்வளவு தொகையை தாருங்கள் என புரோக்கர்கள் இறங்கி செயல்படும் நிலை வந்துள்ளது. நாடாளுமன்றத்தில் இந்த புரோக்கர் விவகாரம் விவாதமாக பதிவாகியுள்ளது. எந்தெந்த தொகுதிகளில் யார் வெற்றி பெறுவார் என்பதை முன்னே கணித்து வைக்கும் நிலை உள்ளது.
வாக்குப்பதிவு இயந்திரத்தில் திருத்தம் செய்து, மக்கள் கருத்துக்கு மாறாக ஒருவர் வெற்றி பெறும் சூழ்நிலை வரும் என்றால், இயந்திரத்தையே நீக்கிவிட்டு, பழையபடி வாக்குச் சீட்டு முறைக்கே செல்ல வேண்டும் என்று வலியுறுத்தினேன். வாக்கு பதிவானதாக கூறிய சதவீதத்தில் கூட வித்தியாசம் வந்துள்ளதை பார்த்துள்ளோம்.
வாக்குப்பதிவு இயந்திரத்தால், முறைகேடு நடப்பது உண்மை என்றால், வாக்கு சீட்டு முறைக்கே செல்ல வேண்டும். எந்த வாக்குச்சாவடியில் இருந்து விவிபேட் பற்றி புகார் வந்தால், விவிபேட் பேப்பர்களை பரிசீலிக்க வேண்டும். வாக்காளர் பட்டியல் நியாயமாக தயாரிக்கப்பட வேண்டும். ஆண்டுக்கு ஒருமுறை வாக்காளர் பட்டியல் சரிபார்க்கப்பட வேண்டும்.
19 கட்சிகள், வாக்கு சீட்டு முறைக்கே செல்ல வேண்டும் என்று, வலியுறுத்தியுள்ளன. இதில் வலிமையான மாநில கட்சிகளும், காங்கிரஸ் உள்ளிட்ட வலிமையான தேசிய கட்சிகளும் அடங்கும். வாக்குப்பதிவு இயந்திரம் தேவை இல்லை என்றுதான் கூறியுள்ளனர்.












Click it and Unblock the Notifications