முன்னாள் திமுக எம்.எல்.ஏ செங்கை சிவம் மரணம்: மு.க.ஸ்டாலின் அஞ்சலி
சென்னை: தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. செங்கை சிவம் மாரடைப்பு காரணமாக நேற்று இரவு உயிரிழந்தார். அவருக்கு வயது 68. தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் அவரது உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
தி.மு.க. செயற்குழு உறுப்பினராகவும், கலை இலக்கிய பேரவை செயலாளராகவும் பொறுப்பு வகித்து வந்த செங்கை சிவம், கடந்த 1996-2001-ம் ஆண்டு பெரம்பூர் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ.வாகவும், வீட்டு வசதி மற்றும் கூட்டுறவு சங்க தலைவராகவும் இருந்தார்.
கடந்த சில நாட்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டு வீட்டிலேயே சிகிச்சை பெற்று வந்த அவருக்கு நேற்று இரவு திடீரென வயிற்று வலி ஏற்பட்டது. இதனால் ஸ்கேன் எடுப்பதற்காக பெரம்பூரில் உள்ள ஸ்கேன் மையத்துக்கு சென்றார்.
அங்கு முதலில் அவருக்கு ஸ்கேன் எடுக்கப்பட்டது. சிறிது நேரம் கழித்து 2-வது முறையாக ஸ்கேன் எடுக்க வேண்டும் என்று கூறியதால் அங்கேயே காத்திருந்தார். அப்போது பாத்ரூமுக்கு சென்ற செங்கை சிவத்திற்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து அங்கேயே மயங்கி விழுந்த அவர் சிறிது நேரத்தில் உயிரிழந்தார்.
அதனையடுத்து, அவரது உடல் பெரம்பூர் ஜமாலியாவில் உள்ள வீட்டிற்கு கொண்டு வரப்பட்டது. அங்கு கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் இன்று காலை 7 மணியளவில் அவரது உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு, முன்னாள் அமைச்சர் க.பொன்முடி, மாவட்ட செயலாளர்கள் பி.கே.சேகர்பாபு, சுதர்சனம் மற்றும் ஆர்.டி.சேகர், வழக்கறிஞர் இரா.கிரிராஜன், சதீஷ்குமார், பகுதி செயலாளர்கள் தமிழ் வேந்தன், ஐ.சி.எப். முரளி, ஜெயராமன், சாமிக்கண்ணு உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தினர்.
செங்கை சிவம் உடல் மாலை 4 மணிக்கு ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு கீழ்ப்பாக்கம் கல்லறை தோட்டத்தில் நல்லடக்கம் செய்யப்படுகிறது.
மறைந்த செங்கை சிவத்திற்கு பிரேமா என்ற மனைவியும், முகிலன் என்ற மகனும், ஷீலா எழிலரசி என்ற மகளும் உள்ளனர்.