கடன் வாங்கித் தர்றோம்னு கூட்டிட்டுப் போய் கட்சியில் சேர்க்கிறாங்க.. அதிமுக மீது திமுக பரபர புகார்!
செங்கல்பட்டு: கடன் பெற்றுத் தருவதாக அழைத்துச் சென்று அதிமுகவில் இணைக்க முயற்சி செய்வதாக செங்கல்பட்டு மாவட்ட எஸ்.பி அலுவலகத்தில் திமுகவினர், அதிமுகவினர் மீது புகார் அளித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
லோக்சபா தேர்தல் நெருங்கும் நிலையில், அரசியல் கட்சிகள் உறுப்பினர் சேர்க்கை பணிகளை தீவிரப்படுத்தின. திமுக, அதிமுக உள்ளிட்ட பிரதான கட்சிகள் தொடங்கி, சிறிய கட்சிகள் வரை, உறுப்பினர் சேர்க்கை பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு, நாடாளுமன்றத் தேர்தலுக்குத் தயாராகி வருகின்றன.

அதிமுகவில் இரண்டு கோடி உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, ஏற்கனவே உள்ள உறுப்பினர்கள் தங்கள் பதிவை புதுப்பித்துக் கொள்வதற்கும், புதிய உறுப்பினர்களை சேர்ப்பதற்குமான விண்ணப்ப படிவம் விநியோகத்தை கடந்த ஏப்ரல் மாதம் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். ஆகஸ்ட் மாதம் வரை உறுப்பினர் சேர்க்கை பணிகள் நடைபெற்று வந்தன.
இந்நிலையில், அதிமுகவினர், பொதுமக்களை ஏமாற்றி அழைத்துச் சென்று தங்கள் கட்சியில் உறுப்பினராக்குவதாக திமுகவினர் புகார் தெரிவித்துள்ளனர். கடன் வாங்கித் தருகிறோம் எனக் கூறி முதியவர்கள், பெண்களை அழைத்துச் சென்று அதிமுக உறுப்பினராக சேர்த்து போட்டோ எடுத்துக்கொண்டு அனுப்பி வைப்பதாக திமுகவினர் குற்றம்சாட்டுகின்றனர்.
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் பகுதியில் அதிமுகவை சேர்ந்த நிர்வாகிகள் திமுகவில் உள்ள முதியவர்களிடம் விவசாய கடன், மாடு வாங்குவதற்கு கடன், மகளிர் சுய உதவிக் குழு கடன் ஆகியவற்றை பெற்று தருவதாக கூறி அழைத்துச் சென்று அதிமுக ஒன்றிய செயலாளர் அலுவலகத்தில் வைத்து சால்வை அணிவித்து புகைப்படங்கள் எடுத்துக்கொண்டு நீங்கள் அதிமுகவில் இணைந்து விட்டீர்கள் எனக் கூறி அனுப்பிவைத்து வருகின்றனர்.
சித்தாமூர் ஒன்றியத்தில் திமுகவினர் அதிக அளவில் இருப்பதால் அதிமுகவினர் இதுபோல் நாடகங்களை நடத்தி வருவதாகவும், அதிமுகவினர் எடுத்துள்ள புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவு செய்வதாகவும், அதில் இருப்பவர்கள் பெரும்பாலும் திமுகவினர் தான் என்றும், இந்த படங்களை அதிமுக தலைமை அலுவலகத்திற்கு அனுப்பி உறுப்பினர்களை அதிக அளவில் சேர்த்து வருவதாக கணக்கு காட்டி வருவதாக திமுக குற்றம்சாட்டியுள்ளனர்.
இதுகுறித்து சித்தாமூர் பகுதியைச் சேர்ந்த திமுகவினர் செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திலும், அதிமுகவினர் உறுப்பினர் சேர்க்கையில் செய்துவரும் மோசடி குறித்தும், பொதுமக்களை ஏமாற்றி அழைத்துச் சென்று தவறாக அவர்களது பெயர்களை பயன்படுத்துவதாகவும் புகார் அளித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் அப்பகுதியினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications