பிரியாணி கடை முதல் பியூட்டி பார்லர் வரை.. தொடரும் அத்துமீறல்கள்.. களையெடுக்குமா கழகம்?
திமுகவினரின் அத்துமீறல்கள் அதிகரித்திருப்பது மக்களிடையே எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது.
Recommended Video
சென்னை: திமுகவினரின் அத்துமீறல்கள் அதிகரித்திருப்பது மக்களிடையே எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் உள்ள இரு முக்கிய கட்சிகளில் ஒன்று திமுக. ஏராளமான தொண்டர்களை வைத்துள்ள திமுக தமிழக எதிர்க்கட்சியாகவும் உள்ளது.
இந்நிலையில் திமுக நிர்வாகிகள் சிலர் முகம் சுளிக்கும் வகையில் நடந்து கொள்கின்றனர். ஏற்கனவே திமுகவினர் அடாவடி செய்பவர்கள் என்ற கருத்து மக்களிடையே நிலவி வரும் நிலையில் அக்கட்சியினர் அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கி வருகின்றனர்.
பிரியாணி கடையில் அடாவடி
திமுக தலைவராக இருந்த கருணாநிதி உடல்நலக்குறைவு காரணமாக சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அப்போது சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள பிரியாணி கடைக்கு தி.மு.க. நிர்வாகியான பாக்சர் யுவராஜ் தலைமையில் வந்த 10-க்கும் மேற்பட்டோர் இலவசமாக பிரியாணி வேண்டும் என கடை ஊழியர்களை சரமாரியாக தாக்கி சென்றனர்.
பாக்ஸர் நீக்கம்
இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து தாக்குதலில் காயம் அடைந்த ஊழியர்களை மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும் பாக்ஸர் யுவராஜ் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.
செல்போன் கடையிலும் அடாவடி
இந்நிலையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு திருவண்ணாமலை மாவட்டம் தாணிப்பாடி கிராமத்தை சேர்ந்த மணிகண்டன் என்பவரின் செல்போன் கடையில் தண்டாரம்பட்டு மேற்கு ஒன்றிய திமுக இளைஞர் அணி ஒன்றிய அமைப்பாளர் ரகுபதி, அவரது நண்பர் கணேஷ் இருவரும் தகராறில் ஈடுபட்டனர்.
சரமாரி தாக்குதல்
ரகுபதியும், கணேஷூம் செல்போன் கடைக்கு மீண்டும் சென்று கடை உரிமையாளர் மணிவண்ணனை சரமாரியாக தாக்கியுள்ளனர். அப்போது கடையில் உள்ள ஊழியர் தங்களை பாதுகாத்துக்கொள்ள சேரை எடுத்து அவர்கள் மீது பதில் தாக்குதல் நடத்த முயன்றார்.
திமுகவினர் கைது
ஆனால் அந்த சேரை பறித்த ரகுபதி அதனை வைத்து மணிகண்டனை பலமாக தாக்கினர். மேலும், கடையையும் அடித்து உடைத்துள்ளனர். இதுதொடர்பாக இரண்டு பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பெரம்பலூர் பியூட்டி பார்லர்
இந்நிலையில் பெரம்பலூரில் அழகு நிலையம் நடத்தி வரும் பெண்ணின் மீது திமுக மாவட்ட முன்னாள் கவுன்சிலர் செல்வகுமார் சரமாரி தாக்குதல் நடத்தும் அதிர்ச்சி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
சஸ்பென்ட்
இதுதொடர்பாக செல்வகுமார் கைது செய்யப்பட்டுள்ளார். பெண்னை தாக்கிய முன்னாள் கவுன்சிலரை கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்து திமுக தலைமை உத்தரவிட்டுள்ளது.
களையெடுக்குமா கழகம்
தொடர்ந்து திமுகவினர் மக்களின் வெறுப்பை சம்பாதிக்கும் வகையில் நடந்துகொள்கின்றனர். இதுகுறித்து திமுக தலைமை தீவிர ஆய்வு நடத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. கட்சிக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையிலும் கட்சிக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் வகையிலும் நடந்துகொள்ளும் இதுபோன்ற நிர்வாகிகளை அடையாளம் கண்டு களையெடுக்குமா கட்சி தலைமை?