சட்டசபை தேர்தலில் திமுக ஆட்சி அமைக்க 37.7%; அதிமுகவுக்கு 35.7% பேர் ஆதரவு - கருத்து கணிப்பு
சென்னை: தமிழக சட்டசபை தேர்தலில் திமுக தலைமையில் ஆட்சி அமையும் என்று 37.7%; அதிமுக தலைமையில் ஆட்சி அமையும் என்று 35.7% பேர் ஆதரவு தெரிவித்துள்ளதாக லயோலா கல்லூரி முன்னாள் பேராசிரியர் ராஜநாயகத்தின் "மக்கள் ஆய்வகம்" கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக சட்டசபை தேர்தல் முடிவுகள், தேர்தல் பிரச்சனைகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் தொடர்பாக "மக்கள் ஆய்வகம்" ஒரு கருத்து கணிப்பை நடத்தி முடிவுகளை அறிவித்துள்ளது. சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய பேராசிரியர் ராஜநாயகம் இந்த முடிவுகளை வெளியிட்டு கூறியதாவது:
சட்டசபை தேர்தல் தொடர்பாக கடந்தாண்டு ஆகஸ்ட்டில் ஒரு கருத்துக்கணிப்பை வெளியிட்டிருந்தோம்.

39 லோக்சபா, 120 சட்டசபை தொகுதிகளில்..
இப்போது, மழை வெள்ள பாதிப்புக்குப்பிறகு மக்களின் மனநிலை எப்படி உள்ளது என்பதை அறிய, தமிழகத்தின் 39 லோக்சபா தொகுதிகளுட்பட்ட 120 சட்டசபை தொகுதிகளில் கருத்துக்கணிப்பு நடத்தினோம். ஜனவரி 7 முதல் 19 வரை நடந்த இக்கருத்துக்கணிப்பில் 5, 464 பேர் பங்கேற்றனர்.

திமுக சற்று கூடுதல் ஆதரவு
இதில் யார் தலைமையில் ஆட்சி என்ற யூகம் தொடர்பான பகுதியில், வரும் சட்டமன்ற தேர்தலில் எந்தக் கட்சி/ கூட்டணி தலைமையில் ஆட்சி அமையும் என்ற யூகத்தில் அதிமுக அணியைவிட திமுக அணி சிறிதளவு முன்னிலை பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

திமுகவுக்கு 37.7%; அதிமுகவுக்கு 35.7%
திமுக தலைமையில் ஆட்சி அமையும் என 37.7%;
அதிமுக தலைமையில் ஆட்சி அமையும் என 35.7% என ஆதரவு தெரிவித்துள்ளனர்.

வைகோ அணிக்கு 5.4%
வைகோ தலைமையிலான மக்கள் நலக் கூட்டணி தலைமையில் ஆட்சி அமைக்க 5.4% பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

பாமக...
அன்புமணியை முதல்வர் வேட்பாளராக அறிவித்துள்ள பாமக தலைமையில் ஆட்சி அமைக்க 2.2% பேர் மட்டும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு பேராசிரியர் ராஜநாயகம் கூறினார்.












Click it and Unblock the Notifications