5 முறை எம்.எல்.ஏவாக இருந்து திமுக எம்.பி வேட்பாளரான புதுவை நாஜிம்
புதுச்சேரி: புதுச்சேரி லோக்சபா தொகுதி தி.மு.க. வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள நாஜிம் புதுவை மாநிலம் காரைக்கால் மாவட்டத்தை சேர்ந்தவர்.
ஏ.எம்.எச்.நாஜிம் பி.ஏ பட்டதாரி. இவரது தந்தை ஹமீது மரைக்காயர் மற்றும் தாயார் நபிஷா உம்மாள் ஆகும். இவருக்கு ஹஷ்மா நாச்சியாள் என்ற மனைவியும், நுக்மன் செய்யது என்ற மகனும், நஜிலா மார்ச்சியானா என்ற மகளும் உள்ளனர்.
இளைஞர் அணியில்
இவர் 26-11-1961 ல் புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் பிறந்தார். கல்லூரி பருவத்திலிருந்து தி.மு.க-வில் ஈடுபட்டிருந்த இவர் 1983-ல் முறைப்படி திமுக-வில் இணைந்தார். 1988-ல் மாநில இளைஞர் அணி துணை அமைப்பாளராகவும் இருந்துள்ளார்.
சிறைவாசம்
1989-ல் மத்திய அரசை கண்டித்து மறியல் போராட்டம் செய்து சிறையும், 2001-ல் திமுக தலைவர் கருணாநிதியை , ஜெயலலிதா அரசு கைது செய்த போது, கடை அடைப்பு மறியல் செய்து சிறையும் அனுபவித்துள்ளார்.
5முறை எம்.எல்.ஏ
1989 முதல் 1995 வரை காரைக்கால் கூட்டுறவு வீடு கட்டும் சங்க தலைவராகவும், 1990-ல் நாமினெட்டட் எம்.எல்.ஏ-வாகவும், பிறகு, காரைக்கால் வடக்கில் 1991 முதல் தொடர்ந்து நான்கு முறையும், தெற்கில் 1 முறையும் என மொத்தம் ஐந்து முறை தி.மு.க சார்பில் நின்று வெற்றி பெற்றுள்ளார்.
2001-ல் வெற்றிபெற்று, புதுச்சேரி நலவழித்துறை அமைச்சராகவும், 2006-ல் வெற்றி பெற்று எதிர்கட்சி தலைவராகவும் உள்ள இவரை, புதுச்சேரி நாடாளுமன்ற திமுக வேட்பாளராக அறிவித்துள்ளார் கருணாநிதி.