ஜெ. விடுதலையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தி.மு.க. மேல்முறையீடு செய்யும்: கருணாநிதி அறிவிப்பு!!
சென்னை: வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் தமிழக முதல்வர் ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தி.மு.க. மேல்முறையீடு செய்யும் என்று தி.மு.க. தலைவர் கருணாநிதி அறிவித்துள்ளார்.
வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் ஜெயலலிதாவை கர்நாடகா உயர்நீதிமன்றம் விடுதலை செய்தது. இதனைத் தொடர்ந்து தமிழக முதல்வராக ஜெயலலிதா மீண்டும் பதவியேற்றுள்ளார்.

ஜெயலலிதாவின் விடுதலையை எதிர்த்து இந்த வழக்கின் முதல் தரப்பான கர்நாடகா அரசு மேல்முறையீடு செய்வது குறித்து இன்னமும் இறுதி முடிவெடுக்கவில்லை. கர்நாடகாவில் ஆளும் காங்கிரஸ் கட்சியிலேயே ஜெயலலிதா விடுதலையை எதிர்த்து மேல்முறையீடு செய்ய எதிர்ப்பு அதிகரித்துள்ளது.
மேலும் கர்நாடகா அரசு ஜூன் 1-ந் தேதிக்குள் மேல்முறையீடு செய்யாவிட்டால் தாம் உச்சநீதிமன்றத்தில் அப்பீல் செய்வேன் என்று பாரதிய ஜனதாவின் சுப்பிரமணியன் சுவாமியும் கூறியிருக்கிறார்.
இந்நிலையில் தி.மு.க. தலைவர் கருணாநிதி இன்று வெளியிட்ட அறிக்கையில் ஜெயலலிதா விடுதலையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தி.மு.க. மேல்முறையீடு செய்யும் என்று அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக கருணாநிதி வெளியிட்ட அறிவிப்பு:
ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கில் கர்நாடகா உயர்நீதிமன்றம் 11-5-2015 அன்று வழங்கிய தீர்ப்பினை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வேண்டும் என்று இந்த வழக்கின் அரசு சிறப்பு வழக்கறிஞர் பி.வி.ஆச்சார்யா, கர்நாடகா அரசின் தலைமை வழக்கறிஞர் ரவி வர்மக் குமார் ஆகியோர் கர்நாடகா அரசுக்கு தெளிவாகப் பரிந்துரை செய்துள்ளார்கள்.
#Jayalalitha மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் உச்ச நீதி மன்றத்தில் #DMK மேல் முறையீடு செய்யும் என்பதை உறுதியாகத் தெரிவித்துக் கொள்கிறேன்
— KalaignarKarunanidhi (@kalaignar89) May 25, 2015 குறிப்பாக ஆச்சார்யா, இந்த வழக்கில் கர்நாடகா மாநில அரசு மேல்முறையீடு செய்யாவிட்டால் அது தவறான சட்ட முன்னுதாரணமாக அமைந்துவிடும் என்றே அந்த அரசுக்கு ஆணித்தரமாகக் கருத்து தெரிவித்துள்ளார்.
மேலும் பல்வேறு அரசியல் கட்சிகளும், முக்கியமான ஊடகங்களும், சட்டவல்லுநர்களும் இதே கருத்தை வலியுறுத்தியுள்ளார்கள். கர்நாடகா மாநில அரசின் தலைமை வழக்கறிஞரும் இந்த வழக்கின் சிறப்பு வழக்கறிஞரும் பரிந்துரை செய்துள்ள நிலையில் அவர்களின் பரிந்துரையை ஏற்று, கர்நாடகா மாநில அரசு உச்சநீதிமன்றத்திலே மேல்முறையீடு செய்யும் என்று நாம் உறுதியாக நம்புகிறோம்.

தொடக்கத்தில் இந்த வழக்கினைத் தொடுத்த சுப்பிரமணியன் சுவாமியும் இந்த வழக்கில் தானே மேல்முறையீடு செய்யப் போவதாகவும் அறிவித்திருக்கிறார்.
இந்த வழக்கினில் பங்கேற்க திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு உரிமை என இரண்டு முறை உச்சநீதிமன்றத்தால் திட்டவட்டமாகத் தெரிவிக்கப்பட்ட நிலையில், ஜெயலலிதா மீதான இந்த சொத்துக் குவிப்பு வழக்கில் உச்சநீதிமன்றத்தில் திராவிட முன்னேற்றக் கழகமும் மேல்முறையீடு செய்யும் என்பதை உறுதியாகத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.
தி.மு.க. தலைவர் கருணாநிதியின் இந்த அறிவிப்பு தமிழக அரசியலில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications