திமுக ஆட்சியில் முதல் பட்டதாரிக்கு அரசு வேலை: மு.க. ஸ்டாலின்
மன்னார்குடி: கடந்த தி.மு.க. ஆட்சியில் குடும்பத்தில் முதல் பட்டதாரிக்கு கல்வி கட்டணத்தில் சலுகை அறிவித்ததுபோல், அடுத்த தி.மு.க. ஆட்சியில் குடும்பத்தில் முதல் பட்டதாரிக்கு அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்கப்படும் என்று ஸ்டாலின் கூறியுள்ளார்.
நமக்கு நாமே விடியல் மீட்பு பயணம் மேற்கொண்டுள்ள ஸ்டாலின் தஞ்சாவூர் மாவட்டத்தில் நேற்று முதல் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.
மாணவர்கள் மத்தியில் பேசிய ஸ்டாலின், தற்போது மாணவர்களுக்கு கல்விக்கடன் கிடைப்பது முக்கிய பிரச்னையாக உள்ளது. கடந்த நாடாளுமன்ற தேர்தலின்போதே, மாணவர்களுக்கு கல்வி கடன் கிடைப்பதை எளிதாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியிருந்தோம். அதேபோல் வரும் சட்டமன்ற தேர்தல் அறிக்கையிலும் கல்விக்கடன் இலகுவாக கிடைக்க உத்தரவாதம் அளிக்கப்படும்.
அடுத்ததாக வேலையில்லா திண்டாட்டம் முக்கிய பிரச்னையாக உள்ளது. கடந்த நான்கரை ஆண்டு அதிமுக ஆட்சியில் வேலைவாய்ப்புக்கு எந்த முக்கியத்துவமும் கொடுக்கவில்லை என்றார்.
ஊழலற்ற தமிழகம்
மாணவர்கள் ஊழல் இல்லாத இந்தியா உருவாக வேண்டும் என் ஆசைப்படுகிறார்கள். அதற்கு நான் உத்தரவாதம் கொடுக்கிறேன். கலெக்ஷன், கமிஷன், கரப்ஷன் இல்லாத தமிழகத்தை உருவாக்குவோம் என உறுதி கூறுகிறேன்.
முதல் பட்டதாரிக்கு வேலை
அதே போல் கடந்த தி.மு.க. ஆட்சியில் குடும்பத்தில் முதல் பட்டதாரிக்கு கல்வி கட்டணத்தில் சலுகை அறிவித்ததுபோல், அடுத்த தி.மு.க. ஆட்சியில் குடும்பத்தில் முதல் பட்டதாரிக்கு அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்கப்படும் என்றார் மு.க.ஸ்டாலின் பேசினார்.
ஆட்சி மாற்றம் வேண்டும்
தஞ்சை சங்கம் ஓட்டலில் முக்கிய பிரமுகர்கள், வணிகர் சங்க பிரதிநிதிகள், சமூக நல ஆர்வலர்களை சந்தித்து ஸ்டாலின் கலந்துரையாடினார். அப்போது பேசிய மு.க.ஸ்டாலின், இந்த மாவட்டத்தை பற்றி எனக்கு தெரியும். என்னைவிட எனது தந்தைக்கு மிகவும் நன்றாக தெரியும். எனவே என்னைவிட என் தந்தை இந்த மாவட்ட வளர்ச்சிக்கு நிச்சயம் அக்கறையுடன் திட்டங்களை செயல்படுத்துவார். எனவே ஆட்சி மாற்றம் ஏற்பட உறுதுணையாக இருப்பீர்கள் என நம்புகிறேன் என்றார்.
நீங்கள் ஆதரியுங்கள்
கடந்த கால திமுக ஆட்சியின்போது சில திட்டங்கள் நிறைவேற்றப்படாமல் போயிருக்கலாம். இதற்கு நிதி பற்றாக்குறை அல்லது மத்திய அரசின் அனுமதி இல்லாதது, சட்ட பிரச்னை காரணமாக இருந்திருக்கலாம். இதற்கு வருந்துகிறேன். ஆனால் அந்நிலை இனி இருக்காது. மீண்டும் தி.மு.க. ஆட்சி அமைய நீங்கள் ஆதரிக்க வேண்டும் என்றார்.
சைக்கிள் பயணம்
இன்று காலையில் மன்னார்குடியில் பொதுமக்கள் மத்தியில் ஸ்டாலின் சைக்கிளில் பயணம் மேற்கொண்டார். ஆவலுடன் பார்க்கும் மக்களை பார்த்து கையசைத்துக்கொண்டே சைக்கிள் பயணம் செய்தார் ஸ்டாலின்.
விவசாயிகளுடன் சந்திப்பு
மன்னார்குடி அருகே விவசாயிகளிடம் பேசிய மு.க.ஸ்டாலின், அதிமுக அரசில் நெசவாளர், விவசாயிகள் என அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று குற்றம்சாட்டினார். மின் கட்டணத்தை குறைக்கக் கோரி போராடியவர்கள் மீது தடியடி நடத்தப்பட்டது என்றார்.
கட்டுமான தொழிலாளர்கள்
மன்னார்குடி அருகே நெடுவாக்கோட்டையில் கட்டிடம், கட்டுமான கலைஞர்களுடன் பேசிய ஸ்டாலின், அதிமுக அரசு நிறைவேற்றும் திட்டங்கள் மக்களை சென்றடைவதில்லை என்று குற்றம் சாட்டினார்.