மாணவர்கள் முகத்தை பார்க்கும் போதெல்லாம் புது சக்தி பிறக்குது- மு.க.ஸ்டாலின்
கும்பகோணம்: மறைந்த குடியரசுத்தலைவர் அப்துல்கலாமின் கனவுகளையும், மாணவர்களின் எண்ணங்களையும் நினைவாக்கும் அரசாக திமுக அரசு செயல்படும் என்று பொருளாளர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். மாணவர்கள் முகத்தை பார்க்கும் போது புது சக்தி பிறப்பதாக ஸ்டாலின் தெரிவித்தார்.
திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் நமக்கு நாமே விடியல் மீட்புப் பயணத்தை கடந்த செப்டம்பர் 20ம் தேதி கன்னியாகுமரியில் துவக்கி திருச்சி வரை 11 மாவட்டங்களுக்கு சென்று முதல் கட்ட பயணத்தை நிறைவு செய்தார்.
2ம் கட்டமாக பயணத்தை கடந்த 7ம் தேதி நீலகிரி மாவட்டத்தில் துவக்கிய மு.க.ஸ்டாலின் கோவை, ஈரோடு, திருப்பூர், கரூர், நாமக்கல் மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்து மக்களை சந்தித்தார்.
நேற்று அவர் பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்து விவசாயிகள், மகளிர் சுய உதவி குழுவினர், பால் உற்பத்தியாளர்கள், வேலையில்லா பட்டதாரிகள், இஸ்லாமிய பிரமுகர்கள் என பல்வேறு தரப்பட்ட மக்களை சந்தித்து கலந்துரையாடினார். இன்று காலை 9 மணிக்கு கும்பகோணம் அருகே உள்ள திருபுவனம் பகுதியில் பட்டு நெசவாளர்கள் குடியிருப்பு பகுதியை பார்வையிட்டு நெசவாளர்களுடன் உரையாடினார்.
பட்டு நெசவாளர்கள்
திருபுவனம் சன்னதி தெருவில் நெசவாளர்களை ஸ்டாலின் சந்தித்தபோது அவர்கள் அடுக்கடுக்காக தங்கள் குறைகளை தெரிவித்தனர். முதலில் மாதத்துக்கு 6 பட்டுப்புடவைகள் வரை ஆர்டர் கிடைத்தது. இதனால் மாதம் ரூ.10 ஆயிரம் வரை வருமானம் வந்தது.
மின்வெட்டு பிரச்சினை
ஆனால் இப்போது மின்வெட்டு, நுால் விலை உயர்வு உள்ளிட்ட பல்வேறு காரணங்கள் வெறும் 2 பட்டுப்புடவைகள் ஆர்டர் கிடைக்கிறது. இதனால் மாதம் வெறும் ரூ.3 ஆயிரம் வரை மட்டுமே வருமானம் உள்ளது. இதனால் பலர் இந்த வேலையை விட்டு விட்டு சமையல் வேலைக்கும், ஓட்டல் வேலைக்கும் சென்றுவிட்டனர்.
நெசவுத் தொழில் பாதிப்பு
இங்கு திகோ, சோழன், சூப்பர், திருவள்ளுவர், அண்ணா என 5 பட்டு கூட்டுறவு சங்கங்கள் உள்ளன. இந்த கூட்டுறவு சங்கங்கள் மூலம் 5 பேர் உறுப்பினர்களாகவும், இது தவிர மேலும் 5 ஆயிரம் தொழிலாளர்களும் என 10 ஆயிரம் பேர் இந்த தொழிலை நம்பி உள்ளோம். வேலை இழப்பால் அனைவரும் வறுமையில் வாடுகிறோம். மேலும் எங்களுக்கு இஎஸ்ஐ திட்டமும் இல்லை. எனவே எங்களுக்கென தனியாக மருத்துவ காப்பீடு திட்டம் ஏற்படுத்தி தர வேண்டும். எங்கள் பிரச்னைகள் அனைத்துக்கும் நீங்கள் தான் தீர்வு காண வேண்டும்' என்றனர். அதற்கு ஸ்டாலின் ‘நீங்கள் அடுத்து திமுகவை ஆட்சிக்கட்டிலில் அமர வைத்ததும், உங்களது அனைத்து பிரச்னைகளுக்கும் நிச்சயம் தீர்வு கிடைக்கும்' என்றார்.
அப்துல் கலாமிற்கு மரியாதை
கும்பகோணத்தில் மாணவர்கள் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பங்கேற்று கலந்துரையாடினார். அப்போது அப்துல்கலாம் பிறந்தநாளை ஒட்டி அங்கு வைக்கப்பட்டிருந்து கலாம் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அப்போது பேசிய அவர், மாணவர்கள் முகத்தை பார்க்கும் போது புது சக்தி பிறப்பதாக தெரிவித்தார்.
திமுக அரசு நிறைவேற்றும்
அப்துல்கலாமின் கனவுகளையும், மாணவர்களின் எண்ணங்களையும் நினைவாக்கும் அரசாக திமுக அரசு செயல்படும் என்றும் அவர் உறுதி அளித்தார். திமுக வெற்றி அடைந்து ஆட்சி அமைத்த பிறகும் மக்களை எல்லா நிலையிலும் தொடர்ந்து சந்திப்போம் என்றும் ஸ்டாலின் குறிப்பிட்டார்.
விஸ்வகர்மா சமூகத்தினருடன் பேச்சு
10.50 மணிக்கு கும்பகோணத்தில் செம்பு உற்பத்தி கூடம் ஒன்றை பார்வையிட்டு தொழிலாளர்களுடன் உரையாடினார். 11.30 மணிக்கு பாபநாசத்தில் பஞ்சலோக சிலை சிற்பிகள் மற்றும் விஸ்வகர்மா சமூகத்தினரை சந்தித்து பேசினார்.
டிராக்டர் பயணம்
திருவையாறு அருகே கண்டியூர் கிராமத்தில் வயல்வெளியில் டிராக்டரில் பயணம் மேற்கொண்டு விவசாய தொழிலாளர்களுடன் கலந்துரையாடிய ஸ்டாலின், பின்னர் அங்கிருந்து கார் மூலம் தஞ்சை வந்து மேலவீதி காமாட்சி அம்மன் கோயில் மண்டபத்தில் 1.30 மணிக்கு இந்துமத குருக்கள், பட்டாச்சாரியார்கள், அர்ச்சகர்களை சந்தித்து பேசினார். செல்லும் இடங்களில் எல்லாம் அனைத்து தரப்பு மக்களும் தங்களது குறைகள், கோரிக்கைகளை தெரிவித்தனர். திமுக ஆட்சி வந்த உடன் குறைகள் நிவர்த்தி செய்யப்படும் என்று ஸ்டாலின் தெரிவித்தார்.