இந்தியாவை ‘இந்து ராஷ்டிரமாக’ மாற்றும் முயற்சியில் மோடி அரசு: திமுக கண்டனம்
சென்னை: 12 முறை எம்.எல்.ஏவாக வெற்றி பெற்று, தமிழக சட்டமன்றத்தில் முத்திரை பதித்தவர், ஐந்து முறை முதல்வராக ஆட்சிப் பொறுப்பில் அமர்ந்தவர், திமுக தலைவராக 11வது முறையாக தேர்வு செய்யப்பட்டு உலக சாதனை படைத்த கருணாநிதியை பாராட்டி திமுகவின் பொதுக்குழுவில் சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
அதிமுகவின் ஆட்சியில் ஊழல் மலிந்து விட்டது என்றும் இரட்டை ஆட்சி நடைபெறுவதாகவும் பொதுக்குழு, செயற்குழுவில் கண்டன தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
திராவிட முன்னேற்றக்கழகத்தின் பொதுக்குழு, செயற்குழு கூட்டம் இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
சிறப்புத் தீர்மானம்
தந்தைப் பெரியார் அவர்களால் பரிமாணம் பெற்ற சுயமரியாதை இயக்கம் - அதனைத் தொடர்ந்து பரிணாமம் பெற்ற திராவிடர் கழகம் - அதிலிருந்து அரசியல் தளத்திற்கு விரிவு பெற்ற, பேரறிஞர் அண்ணா அவர்களால் கட்டமைக்கப்பட்ட திராவிட முன்னேற்றக் கழகம் ஆகிய இயக்கங்களின் அடிநாதமாக ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக விளங்கி வரும் திராவிட இயக்க கருத்தியலுக்கு அரசியல் அரணாக விளங்கி வருபவரும், இதுவரை 11 முறை கழகத்தின் தலைவராகத் தொடர்ந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கருணாநிதி அவர்களை கேரளாவின் பிரபல நாளேடு "மாத்ருபூமி" (3-1-2005) இதழ்,வெளியிட்டுள்ள கட்டுரையில், "உலகத்தில் ஒரு பெரிய அரசியல் கட்சியின் தலைவராக இத்தனை ஆண்டுக் காலம் பொறுப்பு வகிப்பது என்பது வேறு எங்கும் இதுவரை நடந்திராத உலகச் சாதனையாகும்" என்று பாராட்டியுள்ளது.
இதுவரை தான் போட்டியிட்ட 12 தேர்தல்களிலும் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, கடந்த 57 ஆண்டுகளாக சட்டமன்ற வரலாற்றில் தொடர்ந்து தனது முத்திரையைப் பதித்து வருபவரும், ஐந்து முறை முதலமைச்சராக ஆட்சிப் பொறுப்பில் அமர்ந்து தமிழர்களின் நலன் காப்பதிலும், தமிழகத்தின் வளர்ச்சியிலும் இணையற்ற சாதனையாளராக திகழ்பவருமான தமிழர்களின் தனிப் பெருந் தலைவர் கலைஞர் அவர்களை திராவிட முன்னேற்றக் கழகத்தின் 14-வது தேர்தலில் அமையப் பெற்ற பொதுக்குழு, திமுகவின் தலைவராகத் தேர்ந்தெடுப்பதில் பெருமையும் பெருமிதமும் கொள்கிறது.
இத்தகைய பாராட்டுக்குரிய தலைவர் கருணாநிதி அவர்களையும், அவர்களோடு திமுகவை வழி நடத்திட உதவியாக தேர்வு செய்யப்பட்டுள்ள பொதுச் செயலாளர் பேராசிரியர் அவர்களையும், பொருளாளர் மு.க. ஸ்டாலின் அவர்களையும் இப்பொதுக் குழு வாழ்த்தி வரவேற்கின்றது.
மதசார்பின்மை
இந்தியா ஒரு இறையாண்மை கொண்ட நாடு என்று நம் அரசியல் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதற்கும் மேலாக, இந்தியா ஒரு துணைக்கண்டம் என்றே அழைக்கப்படுகிறது.
இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் முகப்புரையில் இந்தியா ஒரு இறையாண்மை உள்ளசமதர்ம, மதச்சார்பற்ற, ஜனநாயக குடியரசாகவே கட்டமைக்கப்பட்டுள்ளது. அரசியல் நிர்ணய சபையில் அரசியல் சட்டம் வடிவமைக்கப்பட்டபோதும், பின்னர் கொண்டு வரப்பட்ட அரசியல் சட்ட திருத்தங்களின் அடிப்படையிலும் இந்தியா ஒரு மதச் சார்பற்ற நாடாகவே அமைந்திட வேண்டுமென்று, அரசியல் நிர்ணய சபையினாலும் - நாடாளுமன்றத்தாலும் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.
திமுக போராடும்
அரசியல் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள "மதச் சார்பின்மை" உள்ளிட்ட அடிப்படை கொள்கைகள் மாற்றப்படவோ, திருத்தப்படவோ கூடாது என்று உச்ச நீதிமன்றம் திட்டவட்டமாக வழங்கியுள்ள தீர்ப்பினை மதித்து, இதுவரை மத்தியில் அமைந்த எல்லா அரசுகளும் செயல்பட்டு வந்துள்ளன.
மத்தியிலும் மாநிலத்திலும், ஆட்சிப்பொறுப்பில் இருந்தாலும், இல்லாவிட்டாலும், மதச்சார்பின்மை கொள்கையினை காப்பாற்றவும், சிறுபான்மையினரைப் பாதுகாக்கவும், திராவிட முன்னேற்றக்கழகம், களத்தில் நின்று போராடத் தயங்கியதே இல்லை.
நரேந்திர மோடி அரசு, பொறுப்புக்கு வந்தவுடன் ஒரு சில அமைச்சர்கள் அறிவிக்கும் பிற்போக்கும் திட்டங்கள் இந்தியாவை ‘இந்து ராஷ்டிரமாக' மாற்றும் முயற்சியில் இறங்கியுள்ளது. இந்தி பேசாத, சமஸ்கிருதத்தை ஏற்காத மக்களுக்கு விளைவிக்கப்படும் அநீதியாகவே அமைந்துள்ளது.
மோடி அமைச்சர்களின் கருத்துக்கள்
குறிப்பாக, "இந்தியாவில் உள்ள அனைவரும் இந்துக்களே";
"இராமருக்குப் பிறக்காதவர்கள், முறை தவறிப்பிறந்தவர்கள்"; "பகவத் கீதை" - தேசிய நூல்; "காந்தியாரைப் போன்றே தேச பக்தர் கோட்சே" "காந்திக்குப் பதிலாக, கோட்சே நேருவைத்தான் சுட்டிருக்க வேண்டும்"; "நாடு முழுவதும் கோட்சேவுக்குச் சிலைகள் அமைக்க வேண்டும்"; "கிறிஸ்துமஸ் நாளை நல்லாட்சி நாளாக அனுசரிப்பது" "கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் சமஸ்கிருதத்தைக்
கற்பிக்க முயற்சி";
"கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் சமஸ்கிருத வாரம் கொண்டாடப்படுவது"; "டெல்லி, ஜவகர்லால் நேரு பல்கலைக் கழக விடுதி மாணவர்களுக்கான சுற்றறிக்கையில் ஆங்கிலம் அகற்றப்பட்டு,
இந்தியை மட்டுமே பயன்படுத்துவது"; "2021-ல் இந்தியாவை "இந்து ராஷ்ட்டிரமாக" மாற்றுவது" என்று பா.ஜ.க. அரசில் அங்கம் வகிக்கும் பொறுப்புள்ள அமைச்சர்கள், பா.ஜ.க.வை வழிநடத்தும் ஆர்.எஸ்.எஸ்., இந்து மகா சபை தலைவர்கள் மற்றும் இவைகளின் துணை அமைப்புகள் வெளிப்படையாகவே கருத்து தெரிவித்தும் அறிக்கை வெளியிட்டும் வருகின்றனர். மத்திய அரசின் இத்தகைய செயல்களை வன்மையாகக் கண்டிக்கிறது.
மத்திய அரசின் நடவடிக்கைகளினால் நாட்டிற்கு ஏற்பட்டுள்ள மதவாத பேரபாயத்தை ஒன்றுபட்டு எதிர்த்திட முன்வருமாறு இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது.
அதிமுக அரசுக்கு கண்டனம்
2011ஆம் ஆண்டு தமிழகத்தில் செல்வி ஜெயலலிதா தலைமையில் அ.தி.மு.க. அரசு அமைந்த நாள் முதல் தேர்தல் நேரத்தில் அக்கட்சி வழங்கிய வாக்குறுதிகள் அனைத்தையும் மறந்து விட்டு, ஜனநாயக விரோத, மக்கள் விரோத ஆட்சியினை நடத்தி வருகிறது. அதன் உச்சமாக தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா வருமானத்திற்கு அதிகமாகச் சொத்து சேர்த்தது பற்றி தொடரப்பட்ட வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டதால் நான்கு ஆண்டுகள் சிறை தண்டனையும், 100 கோடி ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்ட பின் ஏற்பட்ட அரசியல் மற்றும் நிர்வாக மாற்றத்திற்குப் பிறகு, ஆட்சி நிர்வாகம் மேலும் முற்றிலுமாக நிலைகுலைந்தது மட்டுமின்றி, மாநில உரிமைகளும், மக்கள் பிரச்சினைகளும் கேட்பாரற்றுப் போனதோடு ஒரு அரசு ஆட்சிப் பொறுப்பில் இருப்பதாகவே எண்ண முடியாத அளவுக்கு தொடர்ந்து நிர்வாகச் சீரழிவுஏற்பட்டு வருவதைத் தமிழக மக்கள் உணர்வார்கள். அதிலும் குறிப்பாக நீதிமன்றத் தண்டனையால் பதவி இழந்த செல்வி ஜெயலலிதாவின் பினாமி முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள ஓ.பன்னீர்செல்வத்தின் ஆட்சியில் எவ்வித கொள்கை முடிவுகளோ, தொலை நோக்குத் திட்டங்களோ வகுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இரட்டை நிர்வாகம்
முதலமைச்சர், தலைமைச் செயலாளர், காவல் துறைத் தலைவர் ஆகிய பதவிகளில் "இரட்டை நிர்வாகம்" நடை பெறுகின்ற அளவுக்கு, குளறுபடிகள் ஏற்பட்டு, தமிழகத்தின் உரிமைகள், மக்களின் அடிப்படைத் தேவைகள் மற்றும் சட்டம், ஒழுங்கு உள்ளிட்டப் பிரச்சினைகள் குறித்து ஆரோக்கியமான விவாதங்களோ, முடிவுகளோ எடுக்கப்படாமல் அரசு இயந்திரம் முற்றிலுமாக செயலற்றுப் போய் விட்ட நிலைக்குத் தமிழகம் தள்ளப்பட்டுள்ளது.
காவிரி ஆற்றின் குறுக்கே கர்நாடக அரசு அணை கட்டும்
பிரச்சினை. முல்லைப்பெரியாறு நீர்மட்டத்தை உயர்த்துவது பற்றிய பிரச்சினை. அமராவதி பாம்பாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் பிரச்சினை. தொடரும் மீனவர் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண்பது போன்ற மாநில உரிமைகள் குறித்த பிரச்சினைகளிலும்; வரலாறு காணாத தொடர் மின்வெட்டு மற்றும் மின் கட்டண உயர்வு; பால் விலை உயர்வு, பேருந்துக் கட்டண உயர்வு, அத்தியாவசிய பொருள்களின் கடும் விலைவாசி உயர்வு. மாநிலத்தில் பரவி வரும் டெங்கு, பறவைக் காய்ச்சல் உள்ளிட்ட சுகாதாரச் சீர்கேடுகள் அதிகரித்து வருகிறது.
தொடரும் கொலைகள்
தமிழகம் முழுவதும் நிலவி வரும் யூரியா தட்டுப்பாடு காரணமாக
விவசாயிகள் தவிப்பு. சட்டம் ஒழுங்கு சீர்குலைவு; கொலைக்களமாகி வரும் கல்விக் கூடங்கள்; நாள்தோறும் தொடரும் கொலைகள் மற்றும் கொள்ளைகள்
முதியோர் உதவித் தொகை ரத்து;பச்சைத் தேயிலைக்கு குறைந்த பட்ச விலை நிர்ணயம் உள்ளிட்டமக்களின் அடிப்படை பிரச்சினைகள்; சத்துணவு முட்டைகள் வாங்கியதில் ஊழல்; ஆவின்பால் விற்பனையில் ஊழல் மலிந்துள்ளது.
ஊழல் முறைகேடுகள்
கிரானைட் முறைகேடு, ஊழல்; தாது மணல் கொள்ளை, ஊழல்; உள்ளிட்ட ஊழல் முறைகேடுகளிலும் செயல்படாத ஜெயலலிதாவின் பினாமி அரசு எவ்வித விசாரணையையும், தீர்வையும் மேற்கொள்ளாமலும், மாநில உரிமைகளை வலியுறுத்திப் பாதுகாக்காமலும், மக்கள் பிரச்சினைகளுக்குரிய நடவடிக்கைகள் எடுக்காமலும் இருப்பதை திமுக வன்மையாகக் கண்டிக்கிறது.
ஊழல் விசாரணை கமிஷன்
இத்தகைய மக்கள் விரோத, ஜனநாயக விரோத ஆட்சியின் அலங்கோலங்களை தமிழக மக்களுக்கு உணர்த்திடும் வகையில், அ.தி.மு.க. ஆட்சி கடந்த மூன்றரை ஆண்டுகளில் செய்த ஊழல்களையும், முறைகேடுகளையும் பட்டியலிட்டு, திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் பின்னர் அறிவிக்கப்படவிருக்கிற நாளில், மிகப் பெரிய பேரணி ஒன்றினை நடத்தி,தமிழக ஆளுநரிடம் அந்த ஊழல் பட்டியலை அளித்து, அதன் மீது சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்க விசாரணைக் கமிஷன் ஒன்றினை அமைத்திட வேண்டுமென்று கேட்டுக் கொள்வதென இப்பொதுக்குழு தீர்மானிக்கிறது.
தமிழ் புத்தாண்டு தினம்
தைத் திங்கள் முதல் நாள் தான், தமிழர் பொங்கல் திருநாள் - தமிழ்ப் புத்தாண்டு தொடக்க நாள் என்று தமிழ்ப் பேரறிஞர்கள் முடிவு செய்ததை தலைவர் கலைஞர் அவர்களின் தலைமையிலான தி.மு.க. அரசு ஏற்று, 2008ஆம் ஆண்டு சட்டம் இயற்றியது. அதனைத் தொடர்ந்து மூன்று ஆண்டுகள் தமிழகம் முழுவதும் உள்ள தமிழர்கள் தைத் திங்கள் முதல் நாளை தங்கள் இல்லங்களில் தமிழ்ப் புத்தாண்டாகவும், பொங்கல் திரு நாளாகவும் வெகு சிறப்பாகக் கொண்டாடியதோடு, ஊராட்சிகள், நகராட்சிகள் உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளின் சார்பாகவும், மாவட்டத் தலைநகரங்களில் அரசின் சார்பாகவும் தமிழ்ப் புத்தாண்டு கொண்டாடப்பட்டு வந்தது.
ஜெயலலிதா 2011ஆம் ஆண்டு ஆட்சி பொறுப்பேற்றவுடன் தமிழறிஞர்கள் கண்டுணர்த்திய வாழும் தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்களால் கொண்டு வரப்பட்ட பொங்கல் திருநாள் - தமிழ்ப் புத்தாண்டை இரத்து செய்துள்ளதை தமிழர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை என்பதை உணர்த்திட இந்த ஆண்டும் பொங்கல்திருநாளை - தமிழ்ப் புத்தாண்டாகத் தமிழர்கள் இல்லந்தோறும் கொண்டாட வேண்டும் என்று இப்பொதுக்குழு தமிழர்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கிறது.