கோட்டையில் ஸ்டாலினுக்கு இன்முகத்துடன் வரவேற்பு: திமுகவின் பாராட்டு மழையில் ஓபிஎஸ்!
சென்னை: மக்கள் பிரச்சனைக்காக வந்த தமிழக எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலினை நிதி அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் இன்முகத்துடன் வரவேற்று அதிமுக அரசியல் பண்பாட்டில் புதிய அத்தியாயத்தை துவக்கி வைத்துள்ளதாக திமுகவின் பேச்சாளரும் கவிஞருமான மனுஷ்யபுத்திரன் பாராட்டி தள்ளியுள்ளார்.
முதல்வர் ஜெயலலிதா உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளதால் அவர் வசம் இருந்த துறைகள் நிதி அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. முதல்வர் அலுவலக கோப்புகளில் பன்னீர்செல்வமே கையெழுத்திடுவார் எனவும் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இன்று திடீரென ஓ. பன்னீர்செல்வத்தை திமுக பொருளாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான மு.க. ஸ்டாலின் தலைமை செயலகத்தில் சந்தித்தார். இச்சந்திப்பின் போது சென்னையில் நேற்று நடைபெற்ற அனைத்து விவசாய சங்கங்களின் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை பன்னீர்செல்வத்திடம் ஸ்டாலின் வழங்கினார்.
அதிரடி சந்திப்பு
மேலும் காவிரி பிரச்சனைக்காக சிறப்பு சட்டசபை கூட்டம் மற்றும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்ட வேண்டும் என்றும் ஸ்டாலின் வலியுறுத்தியிருந்தார். இச்சந்திப்பு அரசியல் வட்டாரங்களில் புருவத்தை உயர்த்த வைத்துள்ளது.
மனுஷ்யபுத்திரன் கருத்து
அதே நேரத்தில் ஓ. பன்னீர்செல்வம், ஸ்டாலினை சந்தித்தது அதிமுகவில் ஒரு புதிய அத்தியாயம் என திமுகவின் பேச்சாளரும் கவிஞருமான மனுஷ்யபுத்திரன் பாராட்டியுள்ளார். இது தொடர்பாக தம்முடைய பேஸ்புக் பக்கத்தில் மனுஷ்யபுத்திரன் பதிவிட்டுள்ளதாவது:
பாராட்டு
மக்கள் பிரச்சினையில் எதிர்கட்சித்தலைவரை சந்தித்து அவரது கோரிக்கையை இன்முகத்துடன் பெற்றுக்கொள்ளும் ஓ.பி.எஸ் பாராட்டபடவேண்டியவர்.
புதிய அத்தியாயம்
அதிமுக அரசியல் பண்பாட்டில் ஒரு புதிய அத்தியாயத்தை துவங்கி வைக்கிறார். இதுபோல தொடர்ந்து அவர் சுதந்திரமாக செயல்பட வாழ்த்துகிறேன்
இவ்வாறு திமுகவின் மனுஷ்யபுத்திரன் பாராட்டியுள்ளார்.