தும்பை விட்டது நீங்க.. நாங்க வாலை பிடிச்சுக்கிட்டு இருக்கோம்.. திமுக மீது பாய்ந்த அமைச்சர்!
நீட் தேர்வில் தும்பை விட்டது திமுக அரசு என்றும் தற்போது அதிமுக அரசு வாலை பிடித்துக்கொண்டிருப்பதாகவும் அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.
சென்னை: நீட் தேர்வில் தும்பை விட்டது திமுக அரசு என்றும் தற்போது அதிமுக அரசு வாலை பிடித்துக்கொண்டிருப்பதாகவும் அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார். மேலும் கல்வி உரிமையை மத்திய அரசு மாநில அரசிடமிருந்து பறித்து விட்டதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
தமிழகத்தில் மாணவர்கள் மற்றும் அரசியல் தலைவர்களின் கடும் எதிர்ப்புக்குப் பிறகு இந்த ஆண்டு நீர் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டது. இதனால் அரசுப்பள்ளிகளில் பயின்ற மாணவர்கள் மருத்துவ படிப்பு பயில்வதில் சிரமம் என கூறப்பட்டது.
இதையடுத்து தமிழக அரசு மத்திய அரசிடம் நீட்தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்குமாறு வலியுறுத்தியது. ஆனால் இறுதியில் தமிழகத்திலும் நீட் தேர்வு நடத்தப்பட்டது.
திமுகவே காரணம்
இந்நிலையில் தமிழக சட்டசபையில் நீட் தேர்வு தொடர்பாக திமுக சட்டசபை உறுப்பினர் தங்கம் தென்னரசு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்தார். இதன் மீதான விவாதத்தின் போது பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தமிழகத்தில் நீட் தேர்வு நடைபெற திமுகவே காரணம் என குற்றம் சாட்டினார்.
விலக்கு பெற முயற்சி
தமிழக அரசு ஆரம்பத்தில் இருந்தே நீட் தேர்வை எதிர்த்து வருவதாகவும் அவர் கூறினார். நீட் தேர்வு விலக்கு பெறுவதற்காக தொடர்ந்து முயற்சித்து வருவதாகவும் அமைச்சர் விஜயஸ்பாஸ்கர் தெரிவித்தார்.
மத்திய அரசு பறித்து விட்டது
கல்வி உரிமையை மத்திய அரசு மாநில அரசிடமிருந்து பறித்து விட்டது என்றும் அவர் கூறினார். நீட் தேர்வு விவகாரத்தில் கிராமப்புற மாணவர்கள் பாதிக்கப்படாத வகையில் தமிழக அரசின் நடவடிக்கை இருக்கும் என்றும் அவர் கூறினார்.
தும்பை விட்டது திமுக
நீட் தேர்வு விவகாரத்தில் 26ம் தேதிக்கு முன்பாக அரசின் முடிவு அறிவிக்கப்படும் என்றும் அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார். மேலும் நீட் தேர்வில் தும்பை விட்டது திமுக அரசு என்றும் தற்போது அதிமுக அரசு வாலை பிடித்துக்கொண்டிருப்பதாகவும் அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.