நட்சத்திர கிரிக்கெட்டும் திமுகவின் மாஸ்டர் ப்ளானும்!
சென்னை: சென்னையில் நேற்று நடந்த நட்சத்திரக் கிரிக்கெட்டை தங்களின் தேர்தல் பிரச்சாரக் களமாக மாற்றிக் கொண்டது திமுக.
நட்சத்திர கிரிக்கெட்டை ஒளிபரப்பும் உரிமையை சன் டிவி ரூ 9.5 கோடிக்குப் பெற்றிருந்தது. ஸ்பான்சர்கள், நுழைவுக் கட்டணம் என எல்லாம் சேர்த்து ரூ 13 கோடி வரை நடிகர் சங்கத்துக்குக் கிடைத்துவிட்டது. எனவே கட்டடம் கட்டும் பணிகளை ஜோராக ஆரம்பிக்கப் போகிறார்கள்.
இன்னொரு பக்கம் இந்த நட்சத்திரக் கிரிக்கெட்டை வைத்து திமுக பெரிய அரசியலே செய்துவிட்டது. இந்த நிகழ்ச்சியை தங்களின் தேர்தல் பிரச்சாரத்துக்கு சரியாகப் பயன்படுத்திக் கொண்டது அக்கட்சி.
நேற்று ஞாயிற்றுக் கிழமை. விடுமுறை நாள். நேரலையாக ஒளிபரப்பப்பட்ட நட்சத்திர கிரிக்கெட்டைத்தான் பெரும்பாலானோர் பார்த்துக் கொண்டிருந்தனர். நட்சத்திரக் கிரிக்கெட்டை கடுமையாக விமர்சித்தவர்களும், அந்த நிகழ்ச்சியைத்தான் தொலைக்காட்சியில் பார்த்தனர்.
இதை மிகச் சரியாகப் பயன்படுத்திக் கொண்டது திமுக. ஒவ்வொரு விக்கெட், சிக்ஸர், பவுன்டரியின்போதும் 'சொன்னீங்களே, செஞ்சீங்களா...' என்று சின்னச் சின்ன பிரச்சாரப் படங்களை ஒளிபரப்பியது. முதலில் ஜெயலலிதா 2011-ல் அளித்த வாக்குறுதிகளை வீடியோவாக ஒளிபரப்பி, பின்னர் 'சொன்னீங்களே, செஞ்சீங்களா' என்ற கேள்வியுடன் முடித்தனர்.
ஒரு நாள் முழுக்க கிடைத்த இடைவெளிகளிலெல்லாம் இந்த பிரச்சாரம்தான் அதிகமாக ஓடிக் கொண்டிருந்தது சன் டிவியில்.
உண்மையில் இந்த ஒளிபரப்பு உரிமையை முதலில் ஜெயா டிவிக்குத்தான் தரவிருந்தனர். ஆனால் ஜெயா டிவியை விட இரு மடங்கு தொகையைக் கொடுத்து சன் டிவி முந்திக் கொண்டது.
நடிகர் சங்கத்தின் நட்சத்திரக் கிரிக்கெட் திமுகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு ஏகத்துக்கும் உதவியாக இருந்ததைப் பார்த்து ஆட்சி மேலிடம் கடும் கோபத்தில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.