தேர்தல் படுதோல்வி: நாளை கூடுகிறது திமுக உயர்நிலைக் குழு!
சென்னை: திமுக உயர்நிலை குழு கூட்டம் நாளை சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் நடைபெறுகிறது.
இது குறித்து திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தல் குறித்து ஆராய்ந்திடவும், எதிர்காலத்தில் திமுக கழகத்தின் வலிமையையும், வளர்ச்சியையும் மேலும் பெருக்குவதற்கேற்ப நடவடிக்கைகளை எவ்வாறு மேற்கொள்வது என்பது குறித்து முதல் கட்டமாக ஆலோசனை செய்து முடிவுகளை எடுக்கவும், திமு கழக உயர் நிலை செயல்திட்டக் குழுக்கூட்டம் நாளை (2-ந் தேதி) காலை 10 மணிக்கு அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் கருணாநிதி தலைமையில் நடைபெறுகிறது.
இந்த கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகளையொட்டி அடுத்தடுத்து திமு கழகத்தின் நிர்வாக குழு, செயற்குழு ஆகிய குழுக்களின் கூட்டத்துக்கான தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.
மா.செ.களுக்கு செக்?
லோக்சபா தேர்தலில் திமுக ஒரு இடத்தில் வெல்லவில்லை. இந்த தோல்விக்கு கால் நூற்றாண்டுகளுக்கும் மேலாக ஒவ்வொரு மாவட்டத்திலும் குறுநில மன்னர்களாக கோலோச்சிக் கொண்டிருக்கும் மாவட்ட செயலர்களை ஸ்டாலின் நம்பியதுதான் முதன்மையான காரணம் என்று திமுகவினர் குற்றம்சாட்டி வருகின்றனர்.
இதனால் அனைத்து மாவட்ட செயலர்களையும் ஒட்டுமொத்த மாற்றி அமைத்துவிட்டு புதிய நிர்வாகிகள் அமைக்க வேண்டும் என்று ஒவ்வொருநாளும் அண்ணா அறிவாலயத்துக்கு கண்ணீர் மற்றும் குமுறல் கடிதங்கள் குவிந்து கொண்டிருக்கின்றன.
இந்த நிலையில் நாளை நடைபெறும் உயர்நிலை குழுக் கூட்டத்தில் மாவட்ட செயலர்களுக்கு வேட்டு வைக்கும் வகையிலான விவாதங்கள் நடைபெறக் கூடும் என்று கூறப்படுகிறது.