கடலூரில் நாளை ஆய்வு நடத்தும் ஆளுநர் பன்வாரிலாலுக்கு எதிராக திமுக கறுப்பு கொடி போராட்டம்
கடலூரில் நாளை ஆய்வு நடத்தும் ஆளுநர் பன்வாரிலாலைக் கண்டித்து திமுக கறுப்புக் கொடி போராட்டம் நடத்த இருக்கிறது.
கடலூர்: மாநில சுயாட்சிக்கு வேட்டு வைக்கும் வகையில் மாவட்டங்களில் ஆய்வு நடத்தும் ஆளுநர் பன்வாரிலாலுக்கு எதிராக கடலூரில் நாளை கறுப்பு கொடி காட்டும் போராட்டம் நடைபெறும் என திமுக அறிவித்துள்ளது.
தமிழகத்தின் புதிய முழு ஆளுநராக பன்வாரிலால் புரோஹித்தை மத்திய அரசு நியமித்தது. தமிழகத்தின் தற்போதைய அரசியல் சூழலில் ஆளுநரின் நடவடிக்கை மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஒன்றாக இருந்தது.
இந்நிலையில் திடீரென மாவட்டங்களில் ஆளுநர் அதிரடியாக ஆய்வுகளை மேற்கொண்டார். இது மாநிலத்தின் சுயாட்சி உரிமைக்கு எதிரானது அனைத்து கட்சிகளும் கடும் கண்டனம் தெரிவித்திருந்தன.
ஆனால் அதைப்பற்றியெல்லாம் கவலைப்படாமல் கோவையில் தொடங்கி திருப்பூர், நெல்லை, குமரியில் ஆளுநர் பன்வாரிலால் தொடர்ந்து ஆய்வுகளை நடத்தினார். கடலூரில் நாளை ஆளுநர் பன்வாரிலால் ஆய்வுகளை நடத்த இருக்கிறார்.
இந்நிலையில் கடலூரில் நாளை ஆய்வு நடத்த எதிர்ப்பு தெரிவித்து பன்வாரிலாலுக்கு எதிராக கறுப்புக் கொடி போராட்டம் நடத்தப்படும் என திமுக அறிவித்துள்ளது.