ரேஷன் கடை போராட்டம் ஓவர்... அடுத்து தண்ணீர் பிரச்சினைக்காக.. 'மெனு' போட்டு ரெடியாகும் திமுக
ரேஷன் பொருள்கள் வழங்காததைக் கண்டித்து தமிழகம் முழுவதிலும் உள்ள ரேஷன் கடைகளில் இன்று திமுக ஆர்ப்பாட்டம் நடத்தியது.
சென்னை: தமிழகம் முழுவதும் நிலவி வரும் குடிநீர் தட்டுப்பாட்டை போக்கக் கோரி திமுக சார்பில் விரைவில் போராட்டம் நடத்தப்படும் என்று செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளில் அத்தியாவசியப் பொருள்கள் கடந்த சில நாள்களாக வழங்காததை கண்டித்து பொதுமக்கள் தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவித்தனர்.

இந்நிலையில் அரிசி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட பொருள்களை கொள்முதல் செய்யும் பணிகள் நடைபெற்று வருவதாகவும், விரைவில் ரேஷன் கடைகளில் பொருள்கள் வழங்கப்படும் என்றும் அமைச்சர் காமராஜ் தெரிவித்தார்.
இதனிடையே கொளத்தூரில் உள்ள ரேஷன் கடையில் ஆய்வு செய்ய வந்த மு.க.ஸ்டாலினிடம் பொருள்கள் வழங்காதது குறித்து பொதுமக்கள் முறையிட்டனர். அப்போது ரேஷன் கடை பிரச்னைகள் விரைவில் தீர்க்கப்படாவிட்டால் தமிழகம் முழுவதும் திமுக போராட்டம் நடத்தும் என்றும் ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.
அதன்படி இன்று தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகள் முன்பு திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து மு.க.ஸ்டாலின் கூறுகையில், இன்று நடத்தப்பட்ட போராட்டத்தில் தமிழகம் முழுவதும் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட திமுகவினர் கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழகம் முழுவதிலும் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. மக்கள் மீது அக்கறையற்ற செயல்படாத அரசே தமிழகத்தில் உள்ளது. குடிநீர் பஞ்சத்தைப் போக்க வலியுறுத்தி விரைவில் தமிழகம் முழுவதும் திமுக போராட்டத்தில் ஈடுபடும் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications