மாணவ, மாணவியரை ஊக்கப்படுத்தும் ஒரே கட்சி திமுக தான்: மு.க. ஸ்டாலின்
கோவை: மாணவ, மாணவியரை ஊக்கப்படுத்தும் ஒரே கட்சி திமுக தான் என்று அக்கட்சியின் பொருளாளர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
10ம் வகுப்பு மற்றும் பிளஸ் டூ தேர்வில் மாநில அளவில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவ, மாணவியருக்கு ஊக்கத் தொகை வழங்கும் நிகழ்ச்சிக்கு திமுக இளைஞர் அணி ஏற்பாடு செய்திருந்தது. கோவை சின்னியம்பாளையத்தில் இன்று நடந்த நிகழ்ச்சிக்கு திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் தலைமை தாங்கி ஊக்கத் தொகையை வழங்கி மாணவ, மாணவியரை பாராட்டினார்.
அப்போது அவர் பேசுகையில்,
திமுக தலைவர் கருணாநிதியின் பிறந்தநாளையொட்டி இளைஞர் அணி சார்பில் அறக்கட்டளை அமைக்கப்பட்டு 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் டூ தேர்வில் மாநில அளவில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவ, மாணவியருக்கு கல்வி ஊக்கத் தொகை வழங்கப்படுகிறது. கடந்த 6 ஆண்டுகளாக இந்த ஊக்கத் தொகை வழங்கப்பட்டு வருகிறது.
முதலிடம் பிடித்த மாணவருக்கு ரூ.25 ஆயிரம், 2வது இடம் பிடித்தவருக்கு ரூ.15 ஆயிரம், 3வது இடம் பிடித்தவருக்கு ரூ.10 ஆயிரம் வழங்கப்படுகிறது. கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் 3 ஆயிரத்து 328 மாணவ, மாணவியருக்கு ரூ.1 கோடியே 98 லட்சத்து 13 ஆயிரம் ஊக்கத் தொகையாக வழங்கப்பட்டுள்ளது.
இது தவிர பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளையொட்டி நடத்தப்படும் மாவட்ட அளவிலான பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டி ஆகியவற்றில் வெற்றி பெறும் மாணவ, மாணவயிருக்கு பரிசுகள் வழங்கப்படுகிறது. அண்ணா மற்றும் கருணாநிதி பிறந்தநாளையொட்டி நடத்தப்பட்ட போட்டிகளில் இதுவரை வென்ற 11 ஆயிரத்து 908 மாணவ, மாணவியருக்கு ரூ. 3 கோடியே 85 லட்சத்து 25 ஆயிரத்து 500 பரிசு வழங்கப்பட்டுள்ளது.
மாணவ, மாணவியரை திமுகவை போன்று வேறு எந்த கட்சியும் ஊக்கப்படுத்துவது இல்லை. மாணவ, மாணவியரை ஊக்கப்படுத்தும் ஒரே கட்சி திமுக தான்.
மேலும் முதல் பட்டதாரிகளுக்கு இலவச கல்வி, பிற்படுத்தப்பட்டோருக்கு இலவச கல்வி, தொழில் நுழைவுத்தேர்வு ரத்து, தொழிற்கல்வியில் கிராமப்புற மாணவர்களுக்கு 15 சதவீத இட ஒதுக்கீடு, இலவச பஸ் பாஸ், பெண்களுக்கு இலவச கல்வி உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை திமுக அரசு தான் கொண்டு வந்தது. இளைஞர்கள், மாணவர்கள் ஆகியோர் அரசியல் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். இந்த விழாவை அடுத்த ஆண்டு முதல் 4 இடங்களில் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது என்றார்.