தமிழகத்தில் திமுகதான் ஆளுங்கட்சி: மு.க.ஸ்டாலின் தடாலடி
சென்னை: தமிழ்நாட்டில் திமுகதான் தற்போது ஆளுங்கட்சியைப் போல செயல்பட்டு மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறது என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஆர்.கே.நகர் பகுதியில் முன்னாள் எம்.எல்.ஏ. பி.கே.சேகர்பாபு 2014 பெண்களுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் பொங்கல் பரிசு வழங்கும் விழாவுக்கு ஏற்பாடு செய்திருந்தார். இந்த நிகழ்ச்சி தண்டையார்பேட்டை கேப்டன் மகாலில் வியாழக்கிழமை காலை நடைபெற்றது.
விழாவில் தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு 2014 பெண்களுக்கும் சேலை மற்றும் பொங்கலுக்கு தேவையான பொருட்கள் அடங்கிய பொங்கல் பையை வழங்கினார்.
தையல் பயிற்சி முடித்த 140 பெண்களுக்கு இலவச தையல் எந்திரம், ரூ. 27 ஆயிரம் வீதம் 10 பெண்களுக்கு திருமண உதவி, அழகுக்கலை பயிற்சி முடித்த 100 பெண்களுக்கு அழகு சாதன பொருட்கள் மற்றும் நாற்காலிகள், ரத்த தானம் செய்த 61 பேருக்கு கைக்கடிகாரம், கம்ப்யூட்டர் பயிற்சி முடித்த 10 பேருக்கு கம்ப்யூட்டர், சுய உதவி குழு பெண்களுக்கு பண உதவி, பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்கள் ஆகியவற்றையும் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
விழாவில் பேசிய மு.க.ஸ்டாலின் கூறியதாவது:
நலத்திட்ட உதவி
ஆர்.கே.நகர் தொகுதியில் பி.கே.சேகர்பாபு அடிக்கடி நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறார். கடந்த ஒரு ஆண்டில் மட்டும் 15 ஆயிரத்து 94 பேர் நலத்திட்ட உதவிகள் மூலம் பயனடைந்துள்ளனர். இது எனக்கு பெருமை சேர்க்க அல்ல. கலைஞருக்கு பெருமை சேர்க்கும் வகையில் கடமையாற்றுகிறார்.
நாங்கதான் ஆளுங்கட்சி
சட்டமன்ற தேர்தலில் திமுகவிற்கு எதிர்கட்சியாக அமரும் வாய்ப்பு கூட வழங்கப்பட வில்லை. ஆனாலும் கவலைப்படாமல் எதிர்கட்சியைப் போலவே செயல்பட்டு மக்கள் பணியாற்றுகிறோம். அதுமட்டுமல்லாமல் தற்போது ஆளுங்கட்சியாகவும் செயல்பட்டு மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறோம்.
பேரம் பேசும் பெண்கள்
பெண்களுக்குத்தான் நாட்டு நடப்பு அதிகம் தெரியும். ஏனென்றால் அவர்கள்தான் கடைகளுக்கு சென்று பொருட்கள் வாங்குகிறார்கள். எந்த பொருளாக இருந்தாலும் சரி காய்கறி முதல் கருவாடு வரை அனைத்தையும் பேரம் பேசி நல்ல பொருளா என்று பார்த்துதான் வாங்குகிறார்கள்.
நாட்டு நடப்பும் தெரியணும்
வீட்டுக்கு வாங்கும் பொருட்களை ஒருமுறைக்கு இருமுறை யோசித்து வாங்கும் பெண்கள் நாட்டு நடப்பை பற்றியும் முழுமையாக தெரிந்து கொள்ள வேண்டும். நீங்கள் நினைத்தால் நாட்டில் நிச்சயம் மாற்றத்தை கொண்டு வர முடியும் என்றார் மு.க.ஸ்டாலின்.