அதிமுக ஆட்சிக்கு முடிவுகட்ட காங்கிரஸ் உடன் ‘கை’ கோர்ப்போம்: மு.க.ஸ்டாலின்
சென்னை: அரசியலில் நிரந்தர எதிரியோ, நண்பனோ யாரும் கிடையாது. எப்பவும் எதுவும் நடக்கலாம் என்பதற்கு உதாரணமாக அதிமுக ஆட்சியின் அவலங்களுக்கு முடிவு கட்ட காங்கிரசோடு இணைந்து செயல்பட இருப்பதாக திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தடாலடியாக அறிவித்துள்ளார். அதே நேரத்தில் இது தேர்தல் கூட்டணியா என்பது இப்போது சொல்ல முடியாது என்றும் தெளிவாக விளக்கியுள்ளார் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன்.
ஆதித்தமிழர் பேரவை சார்பில் சென்னையில் சமூகநீதி பாதுகாப்பு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.
காங்கிரஸ் உடன் கூட்டணி
கூட்டத்தில் பேசிய மு.க. ஸ்டாலின், அருந்ததியின மக்களின் நலனுக்காக பாடுபடுவதில் மட்டுமல்லாமல் அதிமுக ஆட்சியின் அவலங்களை எடுத்து சொல்லி இந்த ஆட்சிக்கு முடிவு கட்ட காங்கிரசோடு இணைந்து செயல்படுவோம் என்று தெரிவித்தார்.
தேர்தல் கூட்டணியா?
கூட்டத்தில் பேசிய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன், அருந்ததியின மக்களுக்காக திமுகடன் சேர்ந்து செயலாற்றுவோம் என்றார். தானும்,ஸ்டாலினும் கூட்டணியில் தான் இருக்கிறோம் என்று கூறிய அவர், தேர்தல் வரும்போது தான் அது தேர்தல் கூட்டணியா என்று தெரியும் என ஈவிகேஎஸ் இளங்கோவன் தெளிவுபடுத்தினார்.
யாருடன் யார்
2016 சட்டசபை தேர்தலில் யாருடன் யார் கூட்டணியில் இணைவார்கள் என்பதுதான் இப்போதைய முக்கிய பிரச்சினையாக உள்ளது. அதிமுகவிற்கு எதிராக மெகா கூட்டணி அமைக்க திமுக முயற்சி செய்து வருகிறது. அரசியல் கட்சித்தலைவர்கள் பலரும் தினசரி ஒருவரை சந்தித்து பேசி வருகின்றனர்.
காங்கிரஸ் – திமுக கூட்டணி
கடந்த 2004, 2009 நாடாளுமன்ற தேர்தல், 2006,2011 சட்டமன்ற தேர்தலில் திமுக - காங்கிரஸ் கூட்டணி அமைத்து போட்டியிட்டன. ஆனால் 2014 நாடாளுமன்ற தேர்தலின் போது திமுக தலைமையில் தனி அணி அமைந்தது. காங்கிரஸ் தனித்து போட்டியிட்டது.
அது வேற வாய்…
கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைக்க முட்டுக்கட்டை போட்டவர் மு.க.ஸ்டாலின். கூட்டணி அமைப்பதில் தொடங்கி வேட்பாளர் தேர்வு வரை அனைத்தும் ஸ்டாலின் பொறுப்பில் விடப்பட்டது. ஆனாலும் படுதோல்வியை சந்தித்தது.
இது வேற வாய்
அதிமுக மிகப்பிரம்மாண்ட வெற்றியை பெற்றது. அதிமுகவின் வாக்கு சதவிகிதமும் அதிகரித்தது. எனவே சட்டசபை தேர்தலில் அதிமுகவை எதிர்க்க மகா கூட்டணி அமைத்தால் மட்டுமே வெற்றி பெற முடியும் என்று திமுக கருதுவதால் காங்கிரஸ் உடன் மீண்டும் கை சேர்க்க திமுக தயாராகி வருவதாகவே அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.