தனிமையில் தி.மு.க! ஒதுங்கும் அரசியல் கட்சிகள் 'பங்காளி'யாகுமா தே.மு.தி.க?
சென்னை: 2016 சட்டசபை தேர்தலில் தி.மு.க.வுடன் இணைய பெரும்பாலான அரசியல் கட்சிகள் விரும்பாத நிலையில் தே.மு.தி.க. மட்டுமே கூட்டணியில் சேர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
லோக்சபா தேர்தலில் தி.மு.க. அணியில் விடுதலைச் சிறுத்தைகள், புதிய தமிழகம், மனிதநேய மக்கள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய சிறு கட்சிகளே இடம்பெற்றிருந்தன. பாரதிய ஜனதா தலைமையிலான அணியில் தே.மு.தி.க, பா.ம.க., ம.தி.மு.க. ஆகியவை இடம்பெற்றிருந்தன. இடதுசாரிகளோ தனித்துப் போட்டியிடும் நிலைக்கு தள்ளப்பட்டது. வழக்கம்போல அ.தி.மு.க. தனக்கான சிறு கட்சிகளின் ஆதரவுடன் தனித்து களம் கண்டது.
லோக்சபா தேர்தலின் போதே விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கான தொகுதிப் பங்கீட்டில் சிக்கல் எழுந்து பின்னர் சரிசெய்யப்பட்டது. அதன் பின்னர் தி.மு.க.விடம் இருந்து சற்றே விலகிய நிலையில் இருக்கிறது விடுதலைச் சிறுத்தைகள் கட்சி. ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் கூட ஆதரவு தெரிவிக்கவில்லை.

பா.ம.க. தனி அணி
இதேபோல் பாரதிய ஜனதா தலைமையிலான அணியும் கரைந்துபோனது. ம.தி.மு.க. கூட்டணியில் இருந்து முதலில் விலகியது. தற்போது பா.ம.க. தங்களது தலைமையில்தான் சட்டசபை தேர்தலுக்கான கூட்டணி என்று அறிவித்த கையோடு முதல்வர் வேட்பாளராக அன்புமணியை அறிவித்திருக்கிறது. இதில் பா.ஜ.க. கொந்தளித்துப் போய் இருக்கிறது.

த.மா.கா.
இந்த களேபரங்களுக்கு மத்தியில் காங்கிரஸ் கட்சி உடைந்து தமிழ் மாநில காங்கிரஸை நடத்தி வருகிறார் ஜி.கே.வாசன்.

ஸ்ரீரங்கம் தேர்தல்
ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் தமது வேட்பாளரை ஆதரிக்குமாறு பிற கட்சிகளைக் கேட்டு கொண்ட போதும் தி.மு.க.வை எவரும் சீண்டவில்லை. ஆனாலும் அந்தக் கட்சி டெபாசிட்டை தக்க வைத்துக் கொண்டது.

ஒரே நிலைப்பாட்டில் ம.தி.மு.க, இடதுசாரிகள்
தி.மு.க, அ.தி.மு.க.வுடன் கூட்டணி இல்லை என்று ம.தி.மு.க. அறிவித்துள்ளது. இதே நிலைப்பாட்டில் இடதுசாரிகள் இருக்கின்றனர். இதனால் ம.தி.மு.க, இடதுசாரிகள், தலித் கட்சிகள், சிறுபான்மை கட்சிகள் ஓரணியில் திரளலாம்.

குழப்பத்தில் வாசன் கோஷ்டி
தமிழ் மாநில காங்கிரஸைப் பொறுத்தவரையில் தி.மு.க,வா? அ.தி.மு.க.வா? தங்களது தலைமையில் தனி கூட்டணியா என்ற குழப்பத்தில் இருக்கிறது.

தே.மு.தி.க.வே சாய்ஸ்
அதே நேரத்தில் தே.மு.தி.க. தனித்து அமைதியாக இருந்து வருகிறது. தி.மு.க.வுக்கும் தற்போதுள்ள கூட்டணிப் பேச்சுவார்த்தைக்கான ஒரே வாய்ப்புள்ள கட்சியாக தே.மு.தி.க.தான் இருக்கிறது. இரண்டு கட்சிகளுமே அண்ணா தி.மு.க.வை எதிர்த்து அரசியல் செய்தாக வேண்டிய கட்டாயம் இருப்பதால் இரண்டும் ஒரே அணியில் நிற்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது.

செயற்குழு டாப்பிக்
அப்படி தி.மு.க.- தே.மு.தி.க. கூட்டணி உருவானால் நிச்சயம் ஆட்சியில் பங்கு என்று தே.மு.தி.க. கோரலாம்.. தி.மு.க.வும் விட்டும் கொடுக்கலாம்.. அப்படி ஒரு நிலைமை உருவானால் த.மா.கா. இந்த அணியில் இணையலாம். இந்த கூட்டல் கழித்தல்கள் குறித்துதான் வரும் மார்ச் 5-ந் தேதி தி.மு.க.வின் செயற்குழுவில் விரிவாக விவாதிக்கப்பட இருக்கிறது என்கின்றன அறிவாலய வட்டாரங்கள்.












Click it and Unblock the Notifications