இயக்குனர் திருலோகச்சந்தர் மறைவுக்கு திமுக தலைவர் கருணாநிதி இரங்கல்!
சென்னை: இயக்குநர் ஏ.சி திருலோகச்சந்தரின் மறைவுக்கு திமுக தலைவர் கருணாநிதி இரங்கல் தெரிவித்திருக்கிறார்.
தமிழ் சினிமாவின் பழம்பெரும் இயக்குநர்களில் ஒருவரான ஏ.சி.திருலோகச்சந்தர் (86) உடல்நலக்குறைவு காரணமாக நேற்று மரணமடைந்தார்.

மறைந்த திருலோகச்சந்தரின் உடலுக்கு திரையுலகினர் பலரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் திமுக தலைவர் கருணாநிதி, திருலோகச்சந்தர் மறைவுக்கு இரங்கல் தெரிவித்திருக்கிறார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கையில் ''பழம்பெரும் இயக்குனரும், பல வெற்றிப் படங்களை இயக்கியவரும், தனிப்பட்ட முறையில் என்னிடம் பற்றும் பாசமும் கொண்டவருமான அருமை நண்பர் ஏ.சி. திருலோகசந்தர் மறைந்த செய்தியினை அறிந்து மிகவும் வருந்துகிறேன்.
சுமார் 60க்கு மேற்பட்ட திரைப்படங்களை இயக்கியவர் என்பதும், அவர் நடிகர் திலகம் நடித்த 25க்கு மேற்பட்ட திரைப்படங்களை, குறிப்பாக "ஆஸ்கர்" விருது தேர்வுக்குச் சென்ற முதல் தமிழ்த் திரைப்படமான "தெய்வ மகன்" படத்தை இவர் இயக்கியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அவரது மறைவு குறித்து, அவருடைய குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், திரைப்படத் துறையைச் சேர்ந்தவர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்'' என்று கூறியிருக்கிறார்.












Click it and Unblock the Notifications