கருணாநிதி படத்துக்காக அதிமுக - திமுகவினர் சண்டை... உடைந்தது திமுக கவுன்சிலர் மண்டை!
சென்னை: சென்னை அருகே பெருங்களத்தூர் பேரூராட்சி செயல் அதிகாரி அறையில் திமுக தலைவர் கருணாநிதியின் படத்தை வைப்பது தொடர்பாக திமுக - அதிமுகவினர் இடையே இன்று மோதல் உண்டானது. இதில், திமுக கவுன்சிலர் ஒருவரின் மண்டை உடைந்தது.
சென்னையை அடுத்த பெருங்களத்தூர் பேரூராட்சியில், மொத்தமுள்ள 15 உறுப்பினர்களில் தி.மு.க. உறுப்பினர்கள் 9 பேரும், அ.தி.மு.க. உறுப்பினர்கள் 6 பேரும் உள்ளனர். இந்நிலையில், இன்று தலைவர் சேகர் தலைமையில் இன்று பேரூராட்சி மன்றக் கூட்டம் நடைபெறுவதாக இருந்தது. ஆனால், மழை காரணமாக கடைசி நேரத்தில் கூட்டம் ரத்து செய்யப்பட்டது.

இக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக வந்திருந்த திமுக கவுன்சிலர்கள் கையோடு திமுக தலைவர் கருணாநிதியின் புகைப்படத்தையும் எடுத்து வந்திருந்தனர். அதனை பேரூராட்சி செயல் அதிகாரி அறையில் மாட்ட அவர்கள் முயற்சி செய்தனர்.
இதற்கு அ.தி.மு.க. கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவிக்கவே அங்கு வாக்குவாதம் உண்டானது. பதவியில் இல்லாத முன்னாள் முதல்வர் ஜெயலலிதா படம் மாட்டப் பட்டிருக்கும் போது, முன்னாள் முதல்வரான கருணாநிதியின் படத்தை மாட்டுவதில் என்ன தவறு என திமுக கவுன்சிலர்கள் கேள்வி எழுப்பினர்.

இதனால், இருதரப்பிற்கும் இடையே வாக்குவாதம் முற்றி, மோதல் வெடித்தது. ஒருவரை ஒருவர் பேப்பர் வெயிட் மற்றும் நாற்காலியால் கடுமையாகத் தாக்கிக் கொண்டனர். இதில் முன்னாள் துணைத்தலைவரும் தி.மு.க. கவுன்சிலருமான புகழேந்தி தலையில் காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. தி.மு.க.வினர் கொண்டு வந்த கருணாநிதி படமும் உடைந்தது.
அதற்குள்ளாக தகவல் அறிந்து ஏராளமான திமுக மற்றும் அதிமுக தொண்டர்கள் பேரூராட்சி அலுவலகம் முன்பு குவிந்தனர். இதனால், அங்கு பதட்டமான சூழல் நிலவியது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பீர்க்கங்கரணை போலீசார் இருதரப்புடன் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். காயமடைந்த கவுன்சிலர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
ஆனபோதும், அசம்பாவிதங்களைத் தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கையாக அங்கு ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications