உள்ளாட்சித் தேர்தலில் உற்சாகத்துடன் உழைத்திடுக.. தொண்டர்களுக்கு கருணாநிதி வேண்டுகோள்
சென்னை: உள்ளாட்சி தேர்தலில் திமுக வெற்றிக்கு பணியாற்ற தொண்டர்களுக்கு அக்கட்சியின் தலைவர் கருணாநிதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கை:
தமிழகத்தில் உள்ளாட்சி மன்றங்களுக்கான தேர்தல் தேதிகள் கடைசியாக அறிவிக்கப்பட்டு விட்டன. அதாவது தேர்தல் தேதிகளை, மாநிலத் தேர்தல் ஆணையர், 25-9-2016 அன்றிரவு அறிவித்துள்ளார். வேட்பு மனு தாக்கல் எப்போது தெரியுமா? 26-9-2016 முதல் வேட்பு மனு தாக்கல் செய்யலாமாம். அரசியல் கட்சிகள் வேட்பாளர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டாமா? தோழமைக் கட்சிகளையெல்லாம் அழைத்துப் பேச வேண்டாமா? எந்தெந்த கட்சிக்கு எத்தனை இடங்கள், எங்கெங்கே என்பது பற்றியெல்லாம் பேசுவதற்கு நேரம் அவகாசம் வேண்டாமா? வேட்பு மனு தாக்கல் செய்ய இறுதி நாள் அக்டோபர் 3. வேட்பு மனு திரும்பப் பெறுவது அக்டோபர் 6.

அதற்கும் தேர்தல் வாக்குப் பதிவு நடைபெறும் நாளுக்கும் இடையே எத்தனை நாட்கள் தெரியுமா? 11 நாட்கள் மட்டுமே? இன்று வரும், நாளை வரும் என்று பல நாட்களாக எதிர்பார்க்கப்பட்ட தேர்தல் தேதியை அறிவிக்க ஏன் இந்தத் தாமதம்? வேண்டுமென்றே மாநில தேர்தல் ஆணையம் செய்த தாமதம், எதற்கும் நேரம் தராமல் திடீரென்று அறிவித்து அனைத்து எதிர்க்கட்சிகளையும் அதிர்ச்சிக்குள்ளாக்க ஆளும் அ.தி.மு.க.வுடன் சேர்ந்து திட்டமிட்டு செய்யப்பட்ட தாமதம்.......
அ.தி.மு.க.வினரின் தேர்தல் கால அணுகுமுறை திமுகவினருக்கு ஒன்றும் புதியதல்ல. உள்ளாட்சி மன்றத் தேர்தலில் தாராளமான கறுப்புப் பண விநியோகம் - காவல் துறையினரின் வெளிப்படையான ஆதரவு - மாநிலத் தேர்தல் ஆணையத்தின் நடுநிலை தவறிய நடவடிக்கை - மாநில நிர்வாகத்தின் மறைமுக ஒத்துழைப்பு ஆகியவற்றுடன் அ.தி.மு.க. வினர் தேர்தல் களத்தில் இருக்கிறார்கள் என்பதை நினைவில் கொண்டு, கழக வேட்பாளர்கள் மற்றும் கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்கள் வெற்றியை உறுதி செய்யவும், ஜனநாயகத்தை வென்றெடுக்கவும், அறம் - ஆர்வம் ஆகியவை துணை கொண்டு, ஜனநாயகத்தை வெல்வதற்கு எதற்கும் அஞ்சாமல், துணிச்சலாக பணியாற்றுமாறு கட்சியினருக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
அதிமுக அரசின் விருப்பத்திற்கு ஏற்ப தற்போது மாநில தேர்தல் ஆணையம் செயல்பட்டு வருகிறது. மேலும், மாநில தேர்தல் ஆணையம் தனது சுதந்திரத்தை இழந்து விட்டதாகவும், நடுநிலையை விட்டுக்கொடுத்ததாகவும், அதிமுக அரசுக்கு ஆதரவாக செயலாற்றி வருகிறது என்றும் அவர் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications