வேலூர் சிறைவாசலில் செய்தியாளர்களை அசிங்கமாக திட்டிய திமுக நிர்வாகிகள்
வேலூர்: பத்திரிக்கையாளர்களை தாக்கிய வழக்கில் கைது செய்யப்பட்ட திமுக நிர்வாகிகள் வேலூர் சிறைவாசல் முன்பு செய்தியாளர்களை ஆபாச வார்த்தைகளால் திட்டினர்.
நாடாளுமன்ற தேர்தலில் திமுக போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் தோல்வியை தழுவியது. இந்த நிலையில் அக்கட்சியின் பொருளாளர் மு.க.ஸடாலின் தோல்விக்கு பொறுப்பு ஏற்று தனது பதவியை ராஜினாமா செய்யதுள்ளார் என்ற பரபரப்பு தகவல் வெளியானது.
இதையடுத்து செய்தியாளர்கள் குழு சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயம், திமுக தலைவர் கருணாநிதி இல்லம், பொருளாளர் மு.க.ஸ்டாலின் இல்லம் ஆகிய இடங்களுக்கு சென்று அந்த தகவலின் உண்மைத் தன்மையை உறுதி செய்ய முயன்று கொண்டு இருந்தது.
இந்த நிலையில் ஸ்டாலின் இல்லம் முன்பு செய்தியாளர்களை திமுக நிர்வாகிகள் சிலர் தாக்கினர். இந்த தாக்குதலில் காயம் அடைந்தவர்கள் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டனர். மேலும் இந்த விவாகரம் குறித்து சென்னை பெருநகர காவல் ஆணையரிடம் புகார் செய்தனர்.
அவர்களின் புகாரின் பேரில் திமுகவைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் 11 பேர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட அனைவரும் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டனர்.
அவர்களை வேலூர் சிறைவாசலுக்கு கொண்டு வரும்போது அங்கு செய்தியாளர்கள், பத்திரிக்கையாளர்கள், ஒளிப்பதிவாளர்கள், புகைப்படக் கலைஞர்கள் குழுமியிருந்தனர்.
கைது செய்யப்பட்ட திமுக நிர்வாகிகளை படம் எடுத்த போது அனைவரையும் கைதான 11 பேரும் தகாத வார்த்தைகளில் திட்டி கொலை மிரட்டல் விடுத்தனர். மேலும் மு.க.ஸ்டாலினுக்கு ஆதரவாக கோஷம் எழுப்பினர்.