திமுக எம்.எல்.ஏ அனிதா ராதாகிருஷ்ணன் தூத்துக்குடியில் ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில் ஐக்கியம்?
சென்னை: மீண்டும் அதிமுகவில் இணைய விருப்பம் தெரிவித்துள்ள திருச்செந்தூர் திமுக எம்.எல்.ஏ அனிதா ராதாகிருஷ்ணன் வரும் 14ம்தேதி தூத்துக்குடி வரும் ஜெயலலிதா முன்னிலையில் அக்கட்சியில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தூத்துக்குடி மேயர் தேர்தல் பிரச்சாரத்துக்காக வரும் 14ம் தேதி, முதல்வர் ஜெயலலிதா தூத்துக்குடிக்கு வருகிறார். அப்போது அவரது முன்னிலையில், அதிமுக,வில் அனிதா ராதாகிருஷ்ணன் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தூத்துக்குடி மாவட்ட தி.மு.க., செயலாளர் பெரியசாமிக்கும், அனிதா ராதாகிருஷ்ணனுக்கும் நிலவி வரும் பனிப்போர் இந்த முடிவுக்கான காரணம் என்று கூறப்படுகிறது. மக்களவை தேர்தலில் போட்டியிட்ட பெரியசாமியின் மகன் ஜெகனுக்கு ஆதரவாக அனிதா ராதாகிருஷ்ணன் தேர்தல் பணிகளில் ஈடுபடவில்லை என்று கூறப்படுகிறது.
இதை தி.மு.க., தலைவர் கருணாநிதியிடம் பெரியசாமி புகாராக தெரிவித்தார். திமுக அமைப்பு ரீதியாக, தூத்துக்குடி மாவட்டம் இரண்டாக பிரிக்கப்பட்ட போது அனிதா ராதாகிருஷ்ணனுக்கு முக்கியத்துவம் வழங்கவில்லை.
இதுபோன்ற காரணங்களால்தான், நேர்காணல் நிகழ்ச்சிக்கு, தூத்துக்குடி வந்த திமுக பொருளாளர் ஸ்டாலினை, அனிதா ராதாகிருஷ்ணன் சந்திக்க வில்லை என்று கூறப்படுகிறது. ஸ்டாலினை சந்திக்காததற்கு தனது பேரக் குழந்தைகளின் காது குத்து விழா நிகழ்ச்சி இருந்ததுதான் காரணம் என்று அனிதா சொல்லிவிட்டாராம். மேலும், திமுக கரை வேட்டி கட்டுவதையும் சமீப காலமாக அனிதா நிறுத்திவிட்டார்.
இந்நிலையில்தான் ஜெயலலிதா முன்னிலையில், அனிதா ராதாகிருஷ்ணன், அ.தி.மு.க.,வில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே அதிமுகவில் எம்.எல்.ஏவாக இருந்து திமுகவுக்கு சென்றவர் என்பதால் மீண்டும் அவரை சேர்க்க அதிமுக தலைமை காலம் தாழ்த்தி வருகிறது. எனவே சில நிபந்தனைகளின் பேரில் அனிதா ராதாகிருஷ்ணன் மீண்டும் அதிமுகவில் சேர்க்கப்படுவார் என்று தெரிகிறது. அந்த நிபந்தனைகளை ஏற்றுக் கொண்டால் அதிமுகவில் பெரிய செல்வாக்கு எதுவும் கிடைக்காது. இருப்பினும் அதிமுகவிலேயே சேர அனிதா உறுதியாக உள்ளாராம்.