உதயநிதி கருவிலேயே அரசியலுக்கு வந்தவர்... ஸ்டாலினுக்கு பின் நிற்கவேண்டும் - மா.சுப்ரமணியன்
உதயநிதி அரசியலுக்கு வர ஸ்டாலின் தடையாக இருக்க மாட்டார் என்று முன்னாள் மேயர் மா.சுப்ரமணியன் கூறியுள்ளார்.
Recommended Video
சென்னை: திமுக தியாக வரலாறு கொண்டது. உதயநிதி ஸ்டாலின் கருவிலேயே அரசியலுக்கு வந்தவர் என்று கூறியுள்ளார் சைதாபேட்டை தொகுதி திமுக எம்எல்ஏவும், முன்னாள் மேயருமான மா.சுப்ரமணியன் கூறியுள்ளார்.
உதயநிதி ஸ்டாலின் அரசியலுக்கு வர தயார் என்று சமீபத்தில் கூறியிருந்தார். ஸ்டாலின் உத்தரவிட்டால் வரத்தயாராக இருப்பதாகவும் ஊடகங்களில் பேட்டி கொடுத்திருந்தார். உதயநிதி ஸ்டாலினை அரசியலுக்கு அழைக்கும் வகையில் முன்னாள் மேயர் மா. சுப்ரமணியன் கூறியுள்ளார்.
சைதாபேட்டையில் நடைபெற்ற பொங்கல் விழாவில் பேசிய மா. சுப்ரமணியன், ஒரு சிலர் ஒரு படத்தில் நடித்து விட்டு முதல்வராக ஆசைப்படுகின்றனர். இன்றைக்கு அப்படி ஒரு சூழல் உருவாகி விட்டது.
உதயநிதி ஸ்டாலின்
திமுகவில் உள்ளவர்கள் தியாகம் செய்தவர்கள். கருணாநிதி சிறையில் இருந்த போது ஸ்டாலின் சிறு வயதில் சென்று பார்த்தார். அதே போல ஸ்டாலின் சிறையில் இருந்த போது கருவிலேயே சென்று பார்த்தவர் உதயநிதி.
ஸ்டாலின் தடையில்லை
உதயநிதி அரசியலுக்கு வர ஸ்டாலின் ஒருபோதும் தடையாக இருக்க மாட்டார். உங்களைப் போன்ற இளைஞர்கள் ஸ்டாலின் பின்னால் உறுதுணையாக நிற்க வேண்டும். இந்த மேடையை விட்டு இறங்கும் போதே அரசியலுக்கு வந்து விட்டேன் என்று கூற வேண்டும் என்று தெரிவித்தார்.
இளைஞர்கள் அரசியல்
நாங்கள் எல்லாம் ரிட்டையர் ஆகும் வயது வந்து விட்டது. உதயநிதி, அன்பில் மகேஷ் போன்றவர்கள் அரசியலில் இளைஞர்கள் என்பதால் மூத்த தலைவர்களின் பின்னால் நின்று அரசியலில் ஈடுபடவேண்டும் என்றும் கூறினார்.
மா.சுப்ரமணியன்
தந்தை ஸ்டாலினை தம்பி வா...தலைமையேற்க வா என்று கண் கலக்கி அழைத்தார் துரைமுருகன். இப்போது மா. சுப்ரமணியன், உதயநிதி ஸ்டாலின் அரசியலுக்கு வர வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார். விரைவில் இளைஞர் அணி தலைவர் பதவி உதயநிதி வசமாகும் என்று எதிர்பார்க்கலாம்.