ஆர்கே நகர் பணப்பட்டுவாடா விவகாரம்... முதல்வரின் ஒருவரி பதிலில் அதிருப்தி- திமுக வெளிநடப்பு!
ஆர்கே நகர் இடைத் தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் விநியோகம் செய்யப்பட்ட விவகாரத்தில் முதல்வர் மீது வழக்கு பதிவு குறித்து அவரின் பதில் திருப்தி அளிக்கவில்லை என்று கூறி திமுக வெளிநடப்பு செய்தது.
சென்னை: ஆர்கே நகர் இடைத் தேர்தலில் பணப்பட்டுவாடா குறித்து முதல்வருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்ய தேர்தல் ஆணையம் உத்தரவிடப்பட்டுள்ளது குறித்த கேள்விக்கு புலன் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக முதல்வர் ஒரு வரியில் பதில் கூறியதால் திமுக எம்.எல்.ஏக்கள் சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
ஆர்.கே நகர் இடைத்தேர்தல் கடந்த ஏப்ரல் 12-ஆம் தேதி நடத்துவதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதில் அதிமுகவின் இரு அணிகளு்ம போட்டியிட்டன. அதிமுக அம்மா அணி சார்பில் போட்டியிட்ட தினகரன் உள்ளிட்ட அமைச்சர்கள் பணப்பட்டுவாடா ஈடுபட்டதாக ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து கடந்த ஏப்.7-ஆம் தேதி தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் வீடுகளில் வருமான வரி துறையினர் ரெய்டு நடத்தினர். அப்போது ரூ.89 கோடி கணக்கில் வராத பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து ஐடி துறையினர் அளித்த அறிக்கையின் அடிப்படையில் ஆர் கே நகர் தேர்தல் ரத்து செய்யப்பட்டது.
தேர்தல் ஆணையம் உத்தரவு
இந்நிலையில் வழக்கறிஞர் வைரக்கண்ணன் தகவல் அறியும் உரிமை சட்டத்தின்படி தேர்தல் ஆணையத்தில் ஆர்கே நகர் தொகுதி பணப்பட்டுவாடா தொடர்பாக மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். இதற்கு பதிலளித்த தேர்தல் ஆணையம், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, 9 அமைச்சர்கள் மற்றும் டிடிவி தினகரன் மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்டிருந்ததாக கூறியிருந்தது.
சட்டசபையில் ஸ்டாலின்
இந்த விவகாரத்தை இன்று சட்டசபையில் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் எழுப்பினார். முதல்வர் மீது வழக்கு பதிவு செய்ய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டும் இதுவரை வழக்கு பதிவு செய்யப்படாதது ஏன் என்று முக ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.
சபாநாயகர் அனுமதி மறுப்பு
இந்த விவகாரம் குறித்தும் விவாதம் நடத்தவும் அவர் அனுமதி கோரியும் சபாநாயகர் தனபால் அனுமதி வழங்கவில்லை. திமுக சார்பில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. எனினும் ஸ்டாலினை பேசவிடாமல் சபாநாயகர் தடுத்தார்.
திமுகவினர் அமளி
இதைத் தொடர்ந்து திமுகவினர் அதிமுக அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பி அமளியில் ஈடுபட்டனர். பின்னர் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி எழுந்து பதிலளிக்கையில், ஆர்.கே.நகர் விவகாரம் குறித்து புலன் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்று ஒரு வரியில் விளக்கம் அளித்தார்.
வெளிநடப்பு
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் இந்த ஒருவரி விளக்கம் திருப்தி அளிக்கவில்லை என்று கூறி திமுக எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு செய்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், தேர்தல் ஆணையத்தின் உத்தரவை மூடி மறைக்க தமிழக அரசு முயற்சிப்பதாக குற்றம்சாட்டினார்.