நூலிழையில் தப்பிய திமுக எம்.பி ஆ.ராசா.. திடீரென சாய்ந்த விளக்கு கம்பம்.. மயிலாடுதுறையில் பரபரப்பு
மயிலாடுதுறை: திமுக சார்பில் மயிலாடுதுறையில் பட்ஜெட் விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில் ஆ ராசா எம்பி பேசிக் கொண்டிருந்த போது அருகே பொருத்தப்பட்டிருந்த மின்விளக்குகள் திடீரெனச் சாய்ந்தது. சரியாக அதைக் கவனித்த ராசா சில நொடிகளுக்கு முன்பு அங்கிருந்து நகர்ந்தார். இதன் மூலம் நூலிழையில் ராசா தப்பினார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.
இன்று தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய கனமழை கொட்டி வருகிறது. பெரும்பாலான இடங்களில் சூறை காற்றுடன் மழை நிற்காமல் கொட்டி வருகிறது. தமிழ்நாட்டில் பெரும்பாலான இடங்களில் இதே நிலை தான்.

இதற்கிடையே மயிலாடுதுறையில் வீசிய சூறைக்காற்றால் திமுக நிகழ்ச்சியில் ஒரு சிறு விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் ஆ ராசா பேசிக் கொண்டு இருந்த நிலையில், அவர் நூலிழையில் உயிர் தப்பினார். ஆ ராசா ஒரு நொடி தாமதித்து இருந்தாலும் கூட பெரிய பாதிப்பு ஏற்பட்டிருக்கும்.
அதாவது மயிலாடுதுறை மாவட்டத்தில் பட்ஜெட் விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்று வந்தது. திமுக சார்பில் நடந்த இந்த நிகழ்ச்சியில் திமுகவை சேர்ந்த பல்வேறு தலைவர்கள் கலந்து கொண்டனர். குறிப்பாக திமுக துணைப் பொதுச்செயலாளரும் நீலகிரி எம்பியுமான ஆ ராசா இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார். அவர் பட்ஜெட் குறித்து விளக்கமாகப் பேசிக் கொண்டு இருந்தார்.
அங்கு மேடையில் பேசுவது கூட்டத்தில் பங்கேற்கும் அனைவருக்கும் தெரிய வேண்டும் என்பதற்காக மேடைக்கு முன்பு மின்விளக்குகள் வைக்கப்பட்டு இருந்தது. பொதுவாக எல்லா நிகழ்ச்சிகளிலும் இதுபோன்ற மின்விளக்குகளை வைப்பார்கள். அதுபோலவே இன்றைய தினமும் வைத்திருந்தனர். ஆனால், எதிர்பாராத வகையில் பலத்த காற்று வீசியதில் மேடையின் அருகே நிறுத்தப்பட்டிருந்த மின்விளக்குகள் சாய்ந்தது.
சட்டென இதைப் பார்த்துச் சுதாரித்துக் கொண்ட ராசா, அங்கிருந்து நகர்ந்துவிட்டார். அவர் நகர்ந்த அடுத்த நொடியே மைக் மீது அந்த மின்விளக்குகள் விழுந்தது.. இதையடுத்து உடனடியாகப் பேச்சை நிறுத்திய ஆ ராசா அங்கே இருந்து புறப்பட்டுச் சென்றதாகத் தெரிகிறது. இது தொடர்பான வீடியோ இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.












Click it and Unblock the Notifications