மற்ற கட்சிகளை உடைக்க வேண்டிய அவசியம் திமுகவுக்கு இல்லை... மு.க.ஸ்டாலின் பேச்சு
சென்னை : மற்ற கட்சிகளை உடைக்க வேண்டிய அவசியம் திமுகவுக்கு இல்லை. திமுகவுக்கு வரவேண்டியவர்கள் எல்லாம் அவர்களாகவே வருகிறார்கள் என்று தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மு.க.ஸ்டாலின் முன்னிலையில் பல்வேறு கட்சியைச் சேர்ந்த சுமார் 2 ஆயிரம் பேர் திமுகவில் இணைந்த நிகழ்ச்சியில் அவர் இவ்வாறு கூறினார்.

அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த மதிமுக, பாமக, விடுதலை சிறுத்தைகள், தேமுதிக, காங்கிரஸ் கட்சிகளில் இருந்து விலகி திமுகவில் இணைந்தனர். மதிமுக மதுராந்தகம் நகரச் செயலாளர் தயாளன் தன் ஆதரவாளர்களுடன் தி.மு.க. வில் இணைந்தார்.
அப்போது மு.க.ஸ்டாலின் பேசியதாவது...
மற்ற கட்சிகளை உடைக்க வேண்டிய அவசியம் திமுகவுக்கு இல்லை. திமுகவுக்கு வரவேண்டியவர்கள் எல்லாம் அவர்களாகவே வருகிறார்கள். மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளைக் கூட ஜெயலலிதா நிறைவேற்றவில்லை. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்திருப்பது பற்றி முதல் அமைச்சர் கவலைப்படவில்லை.
ஒரு நாள் முதல்வர் என்பார்கள். அதுபோல் இன்றைக்கு தமிழகத்தில் ஒரு மணி நேர முதல்வர் ஜெயலலிதா. இப்ப பார்த்தால் அரை மணி நேர முதல்வராகிவிட்டார் ஜெயலலிதா. போயஸ் கார்டனில் ஜெயலலிதா புறப்பட்டார் என்று செய்தி வந்ததும், அமைச்சர்கள் எல்லாம் இருக்கையின் முன்பகுதியில் உட்காருவார்கள். நான் வேடிக்கைக்காக சொல்லவில்லை. வேதனையுடன் சொல்கிறேன். சட்டமன்றத்தை அவ்வளவு கேவலப்படுத்துகிறார்கள்.
தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட வேண்டும் என்ற உணர்வு நமது கழக தோழர்களிடம் மட்டுமல்ல பொதுமக்கள் மத்தியிலும் அந்த உணர்வு வந்திருக்கிறது. தமிழகத்தில் திமுக ஆட்சியில் இல்லாவிட்டாலும், உண்மையான ஆளும் கட்சியாகவும், எதிர்க்கட்சியாகவும் செயல்பட்டு வருகிறது.
வரும் சட்டமன்றத் தேர்தலில் மக்களின் ஆதரவோடு திமுக தலைவர் கலைஞர் முதல்வராவார். அதிமுக அரசுக்கு முடிவுக் கட்ட அனைவரும் பணியாற்ற வேண்டும். இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறினார்.












Click it and Unblock the Notifications