திமுகவின் தீராக் காதலன்.. துரைமுருகன்!
புதிய பொருளாளராக துரைமுருகன் அறிவிக்கப்பட்டுள்ளார்.
சென்னை: ஒருவழியாக பொருளாளர் ஆகிவிட்டார் துரைமுருகன்!
மாணவனாக இருந்தபோதே திமுகவின்மேல் தீராத காதல்.. வெறித்தனமான அபிமானம் உடையவர் துரைமுருகன்! கல்லூரியில் படித்ததெல்லாம் என்னவோ எம்ஜிஆர் உதவியால்தான். ஆனாலும் எல்லா விசுவாசத்தை திமுகவில்தான் காட்டினார். இதற்கு உச்சக்கட்ட உதாரணம், எம்ஜிஆரே நேரடியாக என்னிடம் வந்துவிடு என்று அழைத்தும் அதனை கனிவோடு நிராகரித்தவர். திமுகதான் எனக்கு எல்லாமே என்று அன்றிலிருந்து இன்றுவரை தன்னை இணைத்து கொண்டவர்.
தனி ரசிகர் கூட்டம்
அறிவாலயம், கோபாலபுரம் போன்ற இடங்களில் எல்லாம் சிரிப்பு சத்தம் வெடித்து கேட்கிறது என்றால் அங்கே துரைமுருகன்தான் பேசிக் கொண்டிருக்கிறார் என்று பொருள். கருணாநிதிக்கு துரைமுருகன் பேச்சு என்றால் ரொம்ப பிடிக்கும். சில சமயங்களில் உட்கார சொல்லி பேச சொல்லி கேட்பாராம். அங்கு மட்டும் இல்லை... சட்டமன்றத்தில் துரைமுருகன் பேச்சிற்கு ஒரு தனி ரசிகர் கூட்டமே உள்ளது.
ஜெயலலிதா பாராட்டு
அடுத்தவர் போன்று மிமிக்ரி செய்வதும், முகபாவனை செய்வதும், கவுண்ட்டர் அடிப்பதிலும் கலக்குவார் துரைமுருகன். அதனால் இவருக்கு கட்சிபேதமின்றி எல்லா எம்எல்ஏக்களும் விழுந்து விழுந்து சிரிப்பார்கள். ஒருமுறை சட்டசபையில் ஜெயலலிதா எதிரே வந்த துரைமுருகன் வணக்கம் கூற, அப்போது ஜெயலலிதாவோ, "மிஸ்டர் துரைமுருகன்... உங்களுக்கு நல்ல ஹ்யூமர் சென்ஸ் இருக்கு. அரசியலுக்கு வராமல் சினிமாவில் வந்திருந்தால் நீங்க ஒரு நல்ல நடிகனா வந்திருப்பீங்க" என்றார்.
யார்தான் பொருளாளர்?
ஆனால் எவ்வளவு காமெடியா பேசினாலும் துரைமுருகனிடம் உள்ள திறமை, அரசியல், வரலாறு உள்ளிட்ட நிலவரங்களை விரல் நுனியில் வைத்திருப்பார். கருணாநிதிக்கு பிறகு ஸ்டாலின்தான் என்று முன்னரே நமக்கு குத்துமதிப்பாக தெரிந்துவிட்ட சமாச்சாரம்தான். ஆனால் ஸ்டாலினிடம் இருக்கும் பொருளாளர் பதவி யாருக்கு போகும் என்பதுதான் திமுக வட்டாரத்தில் பெரிய விவாதமாகவே நீடித்து வந்தது.
துரைமுருகன் சீனியர்
சில மூத்த தலைவர்களின் பெயர்களும் பரிசீலிக்கப்பட்டன! சிலரது பெயர்களை குடும்ப உறுப்பினர்களே முன்மொழிந்தனர்!! பொருளாளராக யாரை நியமிக்கலாம் என்பதில் ஸ்டாலினுக்கு தனியாக ஒரு சாய்ஸ் இருந்தது!!! ஆனால் ஆற்காடு, அன்பழகனை தவிர வேறு யாரை பொருளாளராக நியமித்தாலும் எல்லோருமே துரைமுருகனுக்கு ஜூனியர்கள்தான் ஆவார்கள். அன்பழகன் பொதுச்செயலாளர் பதவியை சிறப்பாக நிர்வகித்து வருகிறார். எனவே அடுத்ததாக உள்ள பொருளாளர் பதவி துரைமுருகனுக்குத்தான் சீனியர் என்ற அடிப்படையில் வந்து சேர்ந்துள்ளது.
புயலை கிளப்பிய ஒருவர்
அது மட்டும் இல்லை.. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு ஸ்டாலினுக்காக பதவியிறக்கத்திற்கு சம்மதித்த பெருந்தன்மைக்காக கிடைக்கும் நன்றி கலந்த பரிசே இது. பொருளாளர் பதவி என்பது சாதாரணமானதில்லை. கட்சிக்குள் புயலைக் கிளப்பி, தடாலடி திருப்பங்களையும், முக்கிய முடிவுகளையும் எடுக்க மூலமாக இருந்ததே ஒரு காலத்தில் திமுகவின் பொருளாளராக இருந்த ஒருவர்தான் .. அவர் யார் என்பதைச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை!
கலக்குவார் துரைமுருகன்
எனவே பொருளாளர் பதவி என்பது மிக முக்கியமான பொறுப்பு. திமுகவின் கோடிக்கணக்கான சொத்தையும் நிர்வகிக்க கூடிய பணி. அக்கட்சியின் அடித்தளமே இந்த பொறுப்புதான். பல்திறமை வாய்ந்த துரைமுருகன் இந்த பணியையும் சிறப்பாகவே செய்வார் என்பதில் சந்தேகமில்லை.