பழைய (நினைப்பில்) 63 தொகுதிகளைக் கேட்கும் காங்கிரஸ்.... 40க்கு ஓகே சொல்லும் திமுக...!
சென்னை: திமுக கூட்டணியில் 63 தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி வலியுறுத்தி வருகிறது. ஆனால் திமுகவோ அதிகபட்சமாக 40 தொகுதிகள் வரை ஒதுக்க முன்வந்திருப்பதாக கூறப்படுகிறது.
2011 சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணியில் 63 தொகுதிகளைப் போராடி பெற்றது காங்கிரஸ் கட்சி. தற்போதும் அதே 63 தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என்பதை காங்கிரஸ் தொடக்கம் முதல்வர் வலியுறுத்தி வருகிறது.
ஆனால் காங்கிரஸ் கட்சியில் இருந்து ஜிகே வாசன் வெளியேறி தனிக்கட்சி தொடங்கியிருக்கும் நிலையில் 63 தொகுதிகளைத் தர முடியாது என்பதில் திமுக உறுதியாக இருந்து வருகிறது. கூட்டணியில் தேமுதிகவும் இணையும் என்பதால் 25 முதல் 30 தொகுதிகள் வரை தரலாம் என்பது திமுக நிலைப்பாடாக இருந்தது.
தற்போது தேமுதிக கூட்டணியில் இணையாத நிலையில் இந்த நிலைப்பாட்டை திமுக மாற்ற வேண்டும் என வலியுறுத்துகிறது காங்கிரஸ். கருணாநிதியை இன்று சந்தித்த மூத்த காங்கிரஸ் தலைவர் குலாம்நபி ஆசாத்தும் 63 தொகுதிகளைக் கேட்டு வலியுறுத்தியிருக்கிறார்.
ஆனாலும் கருணாநிதியோ, கூட்டணியில் மேலும் சில கட்சிகள் இணைய இருப்பதால் நிச்சயம் அத்தனை தொகுதிகளைத் தர முடியாது; அதிகபட்சமாக 30 முதல் 40 தொகுதிகளை தரலாம் என கூறியிருக்கிறார்.
இதனைத் தொடர்ந்து டெல்லி மேலிடத்தில் பேசிவிட்டு தாம் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த வருவதாக கூறிவிட்டு சென்றிருக்கிறார் குலாம்நபி ஆசாத். திமுக 25-ல் இருந்து சற்று இறங்கி வந்திருப்பதே மிகப் பெரிய வெற்றியாக காங்கிரஸ் வட்டாரங்கள் கருதுகின்றன.