கூட்டணி பேச்சுவார்த்தையை உடனே தொடங்க கருணாநிதிக்கு கனிமொழி நெருக்கடி!
சென்னை: சட்டசபை தேர்தலுக்கான கூட்டணிப் பேச்சுவார்த்தையை உடனே தொடங்க வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதிக்கு அவரது மகளும் ராஜ்யசபா எம்.பி.யுமான கனிமொழி தரப்பில் நெருக்கடி கொடுப்பதாகக் கூறப்படுகிறது.
லோக்சபா தேர்தலை மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக சந்தித்தது. ஆனால் திமுக வெற்றி பெறவில்லை. அத்துடன் உட்கட்சி குழப்பம் உச்சகட்டத்தை எட்டியது.

அழகிரி சேர்க்கப்படுகிறார்
இதனைத் தொடர்ந்து திமுகவை மீண்டும் தம் கைகளில் எடுத்தார் கருணாநிதி. முதல் கட்டமாக அழகிரியை திமுகவில் சேர்ப்பதற்கான முடிவெடுக்கப்பட்டுள்ளது.

கூட்டணிப் பேச்சு
இந்த நிலையில் கனிமொழி தரப்போ, 'கருணாநிதி' தலைமையில் சட்டசபை தேர்தலை சந்திக்க வேண்டும்; 'கருணாநிதி'யே கூட்டணிப் பேச்சுவார்த்தைகளை உடனே தொடங்க வேண்டும் என்று நெருக்கடி கொடுக்க தொடங்கியுள்ளது. இதன் மூலம் ஸ்டாலினின் ஆதிக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும் என்று அவர்கள் கருதுகின்றனர்.

வெற்றி உறுதி
மேலும் தற்போதே பலமான கூட்டணியை உருவாக்கி வேலைகளைத் தொடங்கினால் கட்சியில் இருக்கும் பிளவுகள் சரியாகி நிச்சயம் வெற்றி பெறுவோம் என்றும் கருணாநிதிக்கு கனிமொழி தரப்பு ஆலோசனை கூறி வருகிறதாம்.

உள்ளாட்சித் தேர்தலுக்குப் பின்..
இதை கருணாநிதியும் ஏற்றுக் கொண்டதாக கூறப்படுகிறது. உள்ளாட்சித் இடைத் தேர்தல் பஞ்சாயத்துகள் முடிந்த உடனேயே வலுவான கூட்டணிக்கான பேச்சுவார்த்தைகளை தொடங்குகிறேன் என்றும் கருணாநிதி உறுதி அளித்திருப்பதாகவும் அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஸ்டாலின் நிலை
அதே நேரத்தில் தம்மை ஓரங்கட்டும் இந்த நடவடிக்கைகள் குறித்து மு.க.ஸ்டாலின் மவுனமாக பார்த்துக் கொண்டிருப்பதாகவும் உரிய நேரத்தில் அதிரடியாக செயல்படுவார் என்றும் அவரது ஆதரவாளர்கள் கூறி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications