ஜல்லிகட்டு நடத்தியே ஆக வேண்டும் – அலங்காநல்லூரில் திமுகவினர் போராட்டம்
மதுரை: ஜல்லிக்கட்டு நடத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி திமுக சார்பில் அலங்காநல்லூரில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
அப்போது ஜல்லிக்கட்டு நடத்த உச்சநீதிமன்றம் விதித்த தடையை நீக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
இதனிடையே அலங்காநல்லூரில் இன்று நடத்தப்படும் என அறிவிக்கப்பட்ட கடையடைப்பு மற்றும் உண்ணாவிரதப் போராட்டம் கைவிடப்படுவதாக ஜல்லிக்கட்டு விழா அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.

ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என தமிழக அரசு அறிவித்ததை தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டதாக ஜல்லிகட்டு விழா அமைப்பு கூறியுள்ளது.
இந்நிலையில், ஜல்லிக்கட்டு போட்டியை தொடர்ந்து நடத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி மதுரை மாவட்டம் பாலமேட்டில் இன்று கடையடைப்பு மற்றும் வீடுகள் தோறும் கறுப்பு கொடி கட்டிப் போராட்டம் நடைபெற உள்ளது.
இந்த போராட்டங்களில் மதுரையின் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் வணிகர்கள் ஈடுபட உள்ளனர். ஜல்லிக்கட்டு நடத்த உச்சநீதிமன்றம் விதித்த தடையை நீக்கி, போட்டிகளை தொடர்ந்து நடத்துவதற்கு தேவையான உத்தரவாதத்தை, மத்திய, மாநில அரசுகள் தர வேண்டும் என வலியுறுத்தப்பட உள்ளது. இந்த போராட்டத்திற்கு பலன் கிடைக்காவிட்டால், வரும் 16 ஆம் தேதி மாட்டுப் பொங்கல் அன்று மீண்டும் கடையடைப்பு மற்றும் கறுப்புக் கொடிப் போராட்டம் நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications