மதச்சார்பற்ற அரசு அமைய யார் "கை" கொடுத்தாலும் "கை" குலுக்குவோம்: கருணாநிதி
சேலம்: எதிர்காலத்தில் மதச்சார்பற்ற அரசு அமைய யார் கை கொடுத்தாலும் அவர்களோடு கை குலுக்க தயாராக இருப்பதாக திமுக தலைவர் கருணாநிதி அறிவித்துள்ளார்.
சேலத்தில் நேற்று நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக் கூட்டத்தில் கருணாநிதி பேசியதாவது:
சில பேர் சொல்கிறார்கள். பாவம் கருணாநிதி தனியாக நிற்கிறார். எல்லோரும் அவரைக் கைவிட்டு விட்டார்கள் என்று சொல்லுகிறார்கள்.

கை விட்டாலும் நான் கைவிடவில்லையே..
``கை'' என்னமோ என்னை விட்டு விட்டது. நான் யாரையும் கைவிடவில்லை. கைவிடவும் முடியாது.

மதச்சார்பற்ற அரசுக்கு கை குலுக்குவோம்
``கை'' சின்னம் என்னோடு இல்லை என்பதற்காக; கை விட்டு விட்டதாக யாரும் கருதக் கூடாது. ஏனென்றால் எதிர்காலத்திலே நாடு போகிற போக்கில், மதச் சார்பின்மை என்கின்ற வார்த்தைக்கு பொருள் இல்லாத அளவிற்கு நாடு மாறி சமுதாயத்திலே அத்தகைய தாக்குதல் நடத்தப்பட்டு, வேறு வழியில்லாமல் நாம் நம்முடைய கொள்கைகளை, அடித்தட்டு மக்களுக்கு ஆற்றிய பணிகளை ஆற்றுவதற்கு ஏழை எளியவர்கள்பால் எத்தகைய அன்புள்ளம் கொண்டு இதுவரையிலே திராவிட முன்னேற்றக் கழகம் நடைபெற்று வருகிறதோ, அதைத் தொடர்வதற்கு யார் கை கொடுத்தாலும் அந்த ஒரு காரணத்திற்காக நிருபர்கள் வந்திருந்தால் குறித்துக் கொள்ள வேண்டும். மதச்சார்பற்ற முறையிலே ஒரு ஆட்சி நடைபெறுவதற்கு யார் கை கொடுத்தாலும் அந்தக் கையை குலுக்கி வரவேற்போம் என்று மாத்திரம் நான் சொல்லிக் கொள்ள விரும்புகின்றேன்.

வைராக்கிய கொள்கை
அதுதான் திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய தலையாய கொள்கை. வைராக்கியம் மிகுந்த கொள்கை. பெரியார் அவர்களால், பேரறிஞர் அண்ணா அவர்களால் உருவாக்கித் தரப்பட்ட கொள்கைகள்.

லட்சியத்தை கைவிடமாட்டோம்
அந்தக் கொள்கைகளுக்குப் பாதகமாக யார் முன் வந்தாலும் அவர்களை நாங்கள் ஏற்றுக் கொள்ளத் தயாராக இல்லை. எங்களுடைய லட்சியத்தை அதற்காக கைவிட நாங்கள் முனைய மாட்டோம்.

சிறுபான்மை பாதுகாப்பே முக்கியம்
திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு உயிர்க் கொள்கையாக விளங்குகின்ற சாதி மறுப்பு, மதவாத மறுப்பு இவைகளையெல்லாம் விட்டொழித்து யார் சிறுபான்மை சமுதாயத்தோடு உறவு கொள்ள முன்வருகிறார்களோ, சிறுபான்மை சமுதாயத்திற்கு யார் தோழமையாக இருப்பதற்கு யார் முன்வருகிறார்களோ அவர்களோடுதான் இனி வருங்காலத்திலே என்றென்றும் நிலைத்த நெடுங்காலத்திற்கு உறுதியாக இருக்கக் கூடிய உறவு அமையும் என்பதை இந்த நேரத்திலே நான் ஒரு சமிக்ஞையாக எடுத்துச் சொல்லக் கடமைப்பட்டிருக்கின்றேன்.

நாடகமாடினாலும் ஏற்கமாட்டார்கள்
ஏனென்றால், இப்பொழுது உள்ள ஆட்சியாளர்கள் சிறுபான்மை சமுதாயத்திற்கு நாங்கள் வேண்டியவர்கள் என்று நாடகமாடினாலும் கூட, அந்த நாடகத்தை மக்கள் நம்பத் தயாராக இல்லை. சிறுபான்மைச் சமுதாயம் அதை ஏற்கத் தயாராக இல்லை.
இவ்வாறு கருணாநிதி பேசினார்.












Click it and Unblock the Notifications