முரசொலியில் மு.க.ஸ்டாலினை எப்படி குறிப்பிடுவது... வைரலாகும் தகவல் பொய்யானது... திமுக மறுப்பு
முரசொலியில் மு.க.ஸ்டாலினை இனி கழக செயல்தலைவர் என்றுதான் குறிப்பிட வேண்டும் என்று பரவும் தகவல்களில் உண்மை இல்லை என்று திமுக தெரிவித்துள்ளது.
சென்னை : முரசொலியில் மு.கஸ்டாலினை செயல்தலைவர் என்று மட்டுமே குறிப்பிட வேண்டும் என்று பரவும் செய்தி தவறானதாகும் என்று திமுக விளக்கம் அளித்துள்ளது.
முரசொலி நாளிதழில் இனி மு.க.ஸ்டாலின் என்பதற்கு பதிலாக கழக செயல் தலைவர் என்றே குறிப்பிட வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளதாக செய்திகள் பரவின. இதை சில நாளிதழ்களும் வெளியிட்டிருந்தன. ஆனால் இதை திமுக மறுத்து செய்திக் குறிப்பு வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து திமுக முதன்மை செயலாளர் ஆர் எஸ் பாரதி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், கழகத்தின் எழுச்சியையும் கழக செயல்தலைவர் மு.க.ஸ்டாலினின் அபரிமிதமான வளர்ச்சி மீது காழ்ப்புணர்ச்சி கொண்ட சில நாளேடுகள் வேண்டுமென்றே விஷமத்தனமான பொய்ச் செய்தியை வெளியிட்டுள்ளன.
குறிப்பாக திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் பெயருக்கு பதிலாக இனி கழக செயல்தலைவர் என்றே குறிப்பிட வேண்டும் என்றும் ஸ்டாலின் என்ற பெயர் இடம்பெறக் கூடாது என கழக நாளேடான முரசொலி வெளியிடாத ஒரு செய்தியை வெளியிட்டதாக சில நாளேடுகள் விஷமத்தனமான பொய் செய்தியை வேண்டுமென்றே வெளியிட்டுள்ளன.
இதனை திமுக தலைமை கழகம் வன்மையாக கண்டிப்பதோடு இது போன்ற செய்தியையோ சுற்றறிக்கையையோ முரசொலியோ திமுகவோ வெளியிடவில்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் என்று ஆர்.எஸ்.பாரதி அந்த செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications