ரஜினியின் ஆன்மீக அரசியலுக்கு பதிலடி - பெரியார் மண்ணில் 2 நாட்கள் மாநாடு நடத்தும் திமுக
திராவிட அரசியலுக்கு மாற்றாக ஆன்மீக அரசியலை முன்வைத்துள்ள ரஜினிகாந்துக்கு பதிலடி தரும் விதமாக தந்தை பெரியார் பிறந்த ஈரோட்டில் பிரமாண்ட மண்டல மாநாட்டை நடத்துகிறது திமுக.
சென்னை: ரஜினியின் ஆன்மீக அரசியலுக்கு பதிலடி தரும் விதமாக வரும் மார்ச் 24, 25 ஆகிய தேதிகளில் ஈரோட்டில் திமுகவின் மண்டல மாநாடு நடைபெற உள்ளது.
திராவிடர் இயக்க அரசியல் மட்டுமே கொடிகட்டிப் பறக்கும் தமிழகத்தில் இந்துத்துவா அரசியலை காலூன்ற வைக்க ரஜினிகாந்த் மூலமாக பாஜக திட்டமிடுகிறது என்பது பொதுவான விமர்சனம்.
திமுக தலைவர் கருணாநிதியை ரஜினிகாந்த் சந்தித்த போதே அக்கட்சியின் செயல்தலைவர் ஸ்டாலின், ஆன்மீக அரசியலுக்கு பதிலடி கொடுத்திருந்தார்.
ஈரோட்டில் மாநாடு
இந்த நிலையில் மார்ச் 24, 25 ஆகிய தேதிகளில் ஈரோட்டில் திமுகவின் மண்டல மாநாடு நடைபெறும் என்று மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. முழுமையான ஒரு திராவிடர் இயக்க மாநாடாக, ரஜினிகாந்தின் ஆன்மீக அரசியலுக்கு சரியான பதிலடி தரும் மாநாடாக இது அமைய இருக்கிறதாம்.
திராவிடர் மண்
ரஜினியின் ஆன்மீக அரசியலுக்கு அட்டாக் கொடுப்பதற்காகவே பெரியார் பிறந்த ஈரோட்டை திமுக தலைமை தேர்வு செய்திருக்கிறது. திமுகவின் இந்த விறுவிறு வியூகம் அக்கட்சி தொண்டர்களை உற்சாகமடைய வைத்திருக்கிறது. இதற்காக இப்போதே தயாராகி விட்டனர் ஈரோடு திமுகவினர்.
ரஜினியின் அரசியல் பாதை
30 ஆண்டுகளுக்கு பின்னர் திடீரென அரசியலில் இறங்கிவிட்டதாக அறிவித்திருக்கிறார் ரஜினிகாந்த். இன்னமும் தனிக்கட்சியின் பெயரை அறிவிக்காவிட்டாலும் தாம் முன்வைக்கப் போவது ஆன்மீக அரசியல் என கூறியிருப்பது சர்ச்சையாகி உள்ளது.
பாஜக பாதையா?
உண்மை... உழைப்பு...உயர்வு... என்ற கொள்கையோடு ஆன்மீக அரசியல் பாதையில் பயணம் செய்ய உள்ளார் ரஜினிகாந்த். ரஜினியின் பாதை அவரது ரசிகர்களுக்கு உற்சாகத்தை அளித்துள்ளது. அதே நேரத்தில் ரஜினியின் ஆன்மீக அரசியலுக்கு பலமுனைகளில் இருந்தும் தாக்குதல்கள் கொடுக்கப்பட்டு வருகின்றன. அதிமுக, திமுக, சீமான் என பலமுனை தாக்குதல்களை எதிர்கொள்ள வேண்டும் ரஜினி.