சட்டசபை தேர்தலில் திமுக இந்த அளவுக்கு வெல்ல காங்கிரஸ் காரணம்: ப.சிதம்பரம் தடாலடி பேச்சு
மதுரை: சட்டசபை தேர்தலில் திமுக அதிக இடங்களில் வெற்றி பெற்றதற்கு காங்கிரஸ் கட்சிதான் காரணம் என அக்கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டையில் மாவட்ட காங்கிரஸ் அலுவலகத்தில் இன்று உள்ளாட்சித் தேர்தல் குறித்து திருமயம், ஆலங்குடி தொகுதி நிர்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்று சிதம்பரம் பேசியதாவது:
காங்கிரஸ் கட்சியின் உழைப்பு இல்லாமல் திமுக அதிக இடங்களில் வெற்றி பெற்றிருக்க முடியாது. திமுகவின் இந்த வெற்றிக்கு காங்கிரஸ் தான் காரணம். இது திமுகவினருக்கும் தெரியும்.
காரணம் காங்கிரஸ்
திமுக வலிமையான கட்சி என்கிற போதும் அவர்களின் வெற்றிக்கு முக்கியக் காரணம் காங்கிரஸ்தான் என்பதை வெற்றி பெற்ற வேட்பாளர்களே ஒப்புக்கொண்டுள்ளனர். காங்கிரஸ் வலிமையாக இருப்பதை இப்படி நாள் தோறும் நிரூபிக்க வேண்டும். அதை அடிமட்டத் தொண்டர்களை அங்கீகரிப்பதில்தான் உள்ளது. தமிழகத்தில் 39 நாடாளுமன்றத்தொகுதி, 234 சட்டமன்றத் தொகுதி ஆகியவைகளோடு ஜனநாயகத்தின் வழித்தடம் முடிந்து விடவில்லை.
சரிசமம் கிடையாது
வெற்றி தலை நிமிரச்செய்யும், தோல்வி தலைகுனிவைத்தரும் நிலையில், தேர்தலில் வெற்றியையும் தோல்வியையும் எப்படி சமமாகக் பார்க்க முடியும்.
இரண்டு தொகுதிகள்தான்
கன்னியாகுமரியிலும், சிவகங்கையிலுமே காங்கிரஸ் கட்சி முழு வலிமையாக உள்ளது. மீதமுள்ள 37 லோக்சபா தொகுதிகளிலும் வலிமை இல்லாமல் போனதற்கு நிர்வாகக் கோளாறுதான் காரணம். எனவே, அடுத்த 3 ஆண்டுகளில் வரும் நாடாளுமன்றத்தேர்தலுக்குள் கட்சியை வலிமை மிக்கதாக மாற்ற வேண்டியது ஒவ்வொரு தொண்டரின் கடமையாகும். இவ்வாறு சிதம்பரம் பேசினார்.
இளங்கோவன் அப்படி
நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் தோல்விக்கு தார்மீக பொறுப்பேற்று தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியை ஈவிகேஎஸ் இளங்கோவன் ராஜினாமா செய்துள்ள நிலையில், அக்கட்சியின் மூக்கிய தலைவரான ப.சிதம்பரம் இவ்வாறு கூறியிருப்பது முக்கியத்துவம் பெறுகிறது.
திமுக ஆதங்கம்
நடைபெற்ற தேர்தலில் திமுக கூட்டணி சார்பில் 41 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரசால் 8 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற முடிந்தது. திமுகவோ 179 தொகுதிகளில் போட்டியிட்டு 89 தொகுதிகளில் வென்றது. எனவே திமுக ஆட்சிக்கு வர முடியாததற்கு காங்கிரஸ் அதிக தொகுதிகளில் தோற்றது காரணம் என்ற குற்றச்சாட்டு திமுக வட்டாரத்தில் உலவிவருவது குறிப்பிடத்தக்கது.